நாகையில் மாடு முட்டியதில் சாலையில் நடந்து சென்றவர் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவத்தில் ஓட்டுநர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மேல கோட்டவாசல் பகுதியைச் சேர்ந்த ராஜாராமன் மகன் சபரிராஜன்(55). இவர் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் மேலகோட்டை வாசல் பகுதியில் பெட்ரோல் நிலையம் அருகே சாலையில் நடந்து சென்றார்.
அப்போது, அவ்வழியாக சென்ற மாடு அவரை முட்டியுள்ளது. இதில் தடுமாறி கீழே விழுந்த சபரிராஜன் மீது எதிர்புறம் வந்த அரசுப் பேருந்தின் பின்புறம் சக்கரம் ஏறி, இறங்கியது.
இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து நாகை போலீஸார் ஓட்டுநர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விபத்துக்கும் ஓட்டுநருக்கும் தொடர்பில்லை என்பது சிசிடிவி காமிராக்களின் பதிவுகளில் தெளிவாக காடுகின்றன. ஆனால் ஓட்டுநர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளது, தற்போது அரசுப் பேருந்து ஓட்டுநர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் போலீஸாரிடையே பேச்சுவாத்தை நடத்தப்பட்டு வருகிறது. சுமூக முடிவு ஏற்படாவிட்டால் பேருந்துகள் இயக்கத்தை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாடு முட்டி சாலையில் நடந்து சென்றவர் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.