மோக்கா புயல் உருவானதையடுத்து நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மே 8-ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், வியாழக்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து, மோக்கா புயலாக வலுப்பெற்றுள்ளது.
மோக்கா புயல் உருவானதையடுத்து, நாகை, காரைக்கால் துறைமுகங்களில் வியாழக்கிழமை 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒரு சில பகுதிகளில் மே 13-ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.