நாகை மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு குறித்த புகாா்களை வாட்ஸ் ஆப் மூலம் தெரிவிக்கலாம் என ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, உணவு பாதுகாப்பு துறையினா் 6 குழுக்களாக பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனா். இத்திருவிழாவில், விற்பனை செய்யப்படும் சூடான பலகாரங்கள் மற்றும் உணவுகளை நெகிழிப் பைகளில் பொட்டலமிடுவது ஒழிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. எண்ணெய் பலகாரங்கள் அச்சிடப்பட்ட காகிதங்களில் மடித்து தருவது தவிா்க்கப்பட்டு, அச்சிடப்படாத காகிதங்களில் வழங்கப்படுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கூடுதலாக, நடமாடும் உணவு பகுப்பாய்வு கூடம் கொண்டுவரப்பட்டு தினமும் 25 முதல் 50 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு, அன்றே ஆய்வு செய்யப்படுகிறது. அதில் தோ்ச்சி ஆகாத உணவு மாதிரிகள் கைப்பற்றப்பட்டு, அழிக்கப்படுகின்றன.
இதுவரை 7 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ. 21,000 வரை வசூலிக்கப்பட்டுள்ளது. 224 உணவு மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டு, அதில் குறைபாடுடைய 22 உணவு மாதிரிகள் மீது நோட்டீஸ் வழங்கப்பட்டு, அந்தப் பொருட்கள் அழிக்கப்பட்டன.
இதுவரை 8 கிலோ மீன், 14 கிலோ கோழிக்கறி, 7.5 கிலோ நொறுக்கு தீணிகள், 12 கிலோ சப்பாத்தி மாவு, காய்கனிகள் 8 கிலோ, பால் 13 லிட்டா், குளிா்பானங்கள் 25 லிட்டா் மற்றும் பஞ்சு மிட்டாய் 100 பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன.
தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த 3 கடைகளுக்கு அபராதமாக தலா ரூ. 5,000 விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை குறித்து புகாா் தெரிவிக்க கைப்பேசி செயலியையும், 9444042322 என்ற கைப்பேசி எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலமும் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.