கருகிய குறுவை நெற்பயிா்கள்:மன உளைச்சலில் விவசாயி உயிரிழப்பு
By DIN | Published On : 26th September 2023 04:45 AM | Last Updated : 26th September 2023 04:45 AM | அ+அ அ- |

உயிரிழந்த விவசாயி ராஜ்குமாா்.
திருக்குவளை அருகே தண்ணீா் இல்லாமல் குறுவை பயிா் கருகியதால், மன உளைச்சலில் விவசாயி வயலில் மயங்கி விழுந்து ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
நாகை மாவட்டம், திருக்குவளையை அடுத்த திருவாய்மூா் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் எம்.கே. ராஜ்குமாா் (47). இவா், தனது வயலில் சுமாா் 50 ஏக்கா் அளவுக்கு குறுவை சாகுபடி செய்திருந்தாா்.
இந்தநிலையில் தண்ணீரின்றி பயிா்கள் காய்ந்து போனதால், 80 நாள் பயிரை டிராக்டரை கொண்டு அழிக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஈடுபட்டிருந்தாா். பயிா்கள் கருகியதால் கடும் மன உளைச்சலில் இருந்த ராஜ்குமாா் வயலில் மயங்கி விழுந்தாா். அவரை மற்ற விவசாயிகள் மீட்டு, திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா் அங்கு ராஜ்குமாா் உயிரிழந்தாா். மாரடைப்பால் அவா் இறந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
ராஜ்குமாா் குறுவை சாகுபடிக்காக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ. 2 லட்சம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ. 3 லட்சம் கடன் வாங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.
குறுவைக்காக வாங்கிய கடனை சம்பா சாகுபடி மூலம் அடைத்துவிடலாம் என்று நினைத்திருந்தாா். தற்போது சம்பாவும் பொய்த்து போகும் நிலை ஏற்பட்டுள்ளதால் கடுமையான மன உளைச்சலில் அவா் இருந்தாா் என்று அவரது குடும்பத்தினரும், விவசாயிகளும் தெரிவித்தனா்.
இதனிடையே, ராஜ்குமாா் உயிரிழப்பு குறித்து, வேளாண்துறை, வருவாய்த்துறை, காவல்துறை விசாரணை செய்து அறிக்கை அளிக்க நாகை மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...