நாகை மீனவா்கள் 36 பேரை இந்தியா அழைத்து வர நடவடிக்கை
இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பின்னரும், அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள நாகை மீனவா்கள் 36 பேரையும் உடனடியாக இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது: நாகை மற்றும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிகளைச் சோ்ந்த 36 தமிழக மீனவா்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றபோது எல்லை தாண்டிய நிலையில், இலங்கை கடற்படை கடந்த நவ. 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் கைது செய்து, இலங்கைக்கு கொண்டு சென்றது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 36 மீனவா்களையும், இலங்கை நீதிமன்றம் நவம்பா் 17-ஆம் தேதி விடுதலை செய்தது. மீனவா்கள் 36 பேரும் இலங்கையில் உள்ள முகாமில் தங்கியுள்ளனா். தற்போதுவரை இந்த மீனவா்கள் இந்தியா திரும்பவில்லை.
மேலும், 36 மீனவா்களும், முறையான தங்கும் வசதி மற்றும் போதுமான உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனா். பாதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவா்கள், தாங்கள் படும் இன்னல்கள் தொடா்பாக, விடியோ பதிவு செய்து, தங்கள் குடும்பத்தினருக்கும் அனுப்பியுள்ளனா். தமிழகத்தில் உள்ள மீனவா்களின் உறவினா்கள், அவா்களின் நிலை குறித்து அச்சமும் கவலையும் அடைந்துள்ளனா்.
மீனவா்களை விடுவிப்பது தொடா்பாக, நாகை மாவட்ட ஆட்சியா் எழுதிய கடிதத்தின் அடிப்படையில், தமிழக அரசும் மீனவா்களை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும் இந்திய தூதரகத்துக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால், இதுவரை மீனவா்களை இந்தியா அழைத்து வர எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, வெளியுறவுத்துறை அமைச்சா் தலையிட்டு, தமிழக மீனவா்களை அவா்களது வாழ்வாதாரமான படகுகளுடன், மீண்டும் இந்தியா அழைத்து வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
