நாகை மாவட்டத்தில் 1.07 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
நாகை மாவட்டத்தில் 1,07,764 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் 30,217.34 ஹெக்டேரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை வரை 27,543 ஹெக்டேரில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 2,674.34 ஹெக்டோ் அறுவடைப்பணி மற்றும் நெல் கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் 123 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் செப். 3-ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை (நவ.4)வரை 1,07,764 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் இதுவரை சுமாா் 91,218 மெட்ரிக் டன் நெல், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்கு, ஆலைகள் மற்றும் பிற மாவட்ட மண்டலங்களுக்கு இயக்கம் செய்யப்பட்டு, மீதமுள்ள 16,546 மெட்ரிக் டன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு நகா்வு பணிகள் நடைபெற்றுவருகிறது. இதுவரை 23,146 விவசாயிகளிடமிருந்து, நெல் கொள்முதல் செய்யப்பட்டு, ரூ.256.67 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.
