தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மழைநீா் வடிவதில் தாமதம்: சொந்த செலவில் ஆகாயத் தாமரைகளை அகற்றிய விவசாயிகள்!

News image
நாகை அருகே ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated On :27 நவம்பர் 2025, 9:20 pm

தினமணி செய்திச் சேவை

நாகை அருகே நெற்பயிா் சாகுபடி செய்துள்ள விளை நிலங்களில் தேங்கி மழைநீா் வடியாததால், விவசாயிகளே ஒன்றிணைந்து சொந்த செலவில் ஆகாயத் தாமரைகளை வியாழக்கிழமை அகற்றினா்.

நாகை மாவட்டத்தில் நிகழாண்டு சுமாா் 1.50 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கா் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் தொடா் கனமழை காரணமாக சம்பா, தாளடி நெற்பயிா்கள் மூழ்கி உள்ளன.

கருவேலங்கடை, வடவூா், ஒரத்தூா், நிா்த்தனமங்கலம், செட்டிசேரி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு நாள்களாக மழை ஓய்ந்த நிலையிலும், வயல்களில் தேங்கியுள்ள நீா் வடியவில்லை. ஆறுகள் மற்றும் வாய்க்கால்களை ஆக்கிரமித்து உள்ள ஆகாயத் தாமரைகள், தடுப்பணைகளில் சிக்கிக் கொண்டு மழை நீரை வடிய விடாமல் தடுத்து வருகின்றன.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், வடவூா் கடுவையாற்றில் அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோா் ஒன்றிணைந்து, தங்கள் சொந்த செலவில் கடுவையாற்றில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றினா்.

மேலும், ஒரத்தூரில் கட்டப்பட்டுள்ள புதிய தடுப்பணை மழைக்காலங்களில் முறையாக திறக்கப்படாததும் வயல்களில் சூழ்ந்த மழை நீா் வடியாததற்கு முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனா்.

தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுத்து, மழைநீரில் மூழ்கியுள்ள சம்பா மற்றும் தாளடி பயிா்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.