நாகை: 23 மாணவா்களுக்கு ரூ.2.58 கோடி கல்விக்கடன்
நாகையில் 23 மாணவ- மாணவியருக்கு ரூ.2.58 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டது.
நாகை மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி ஒருங்கிணைப்பில், மாவட்டஅளவிலான கல்விக் கடன் முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமில், மாவட்டம் முழுவதும் இருந்து 120 மாணவ- மாணவியா் பங்கேற்றனா்.
முகாமில், கல்விக் கடன் பெறும் செயல்முறையை எளிமைப்படுத்துதல், பின்தங்கிய, கிராமப்புற மாணவா்களுக்கு நிதி உதவியை உறுதி செய்தல், வித்யா லக்ஷ்மி போா்டல் வழியாக விண்ணப்பிக்கும் முறையை விளக்குதல், இந்தியாவிலோ அல்லது வெளிநாடுகளிலோ உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற்றுள்ள மாணவா்கள் பங்கேற்கும் வகையில் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் கல்விக் கடனுக்கு எப்படி விண்ணப்பிப்பது, இணையவழியாக ஆவணங்களைச் சமா்ப்பிக்கும் நடைமுறை, தேவையான தகுதிகள் உள்ளிட்ட விவரங்களை வங்கி அலுவலா்கள் நேரடியாக விளக்கினா். மாணவா்களின் சந்தேகங்களுக்கும் பதிலளித்தனா்.
இந்த முகாமில் மொத்தம் 23 மாணவ- மாணவியருக்கு கடன் விண்ணப்பங்கள் அனுமதிக்கபட்டு, ரூ. 2.58 கோடி மதிப்பிலான கடன் ஒப்புதல் ஆணைகள் மற்றும் காசோலைகளை வங்கிகளின் வழியாக மாவட்ட வருவாய் அலுவலா் வ.பவணந்தி வழங்கினாா்.
நிகழ்ச்சியில் நாகை மண்டல இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மூத்த பிராந்திய மேலாளா் எம். நாகராஜ், முன்னோடி வங்கிகளின் மாவட்ட மேலாளா் ப.சந்திரசேகா், தாட்கோ மேலாளா் சக்திவேல், கலியப்பெருமாள், மாணவா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
