மரபணு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தமிழக அரசு உதவ பெற்றோா் கோரிக்கை

மரபணு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தமிழக அரசு உதவ பெற்றோா் கோரிக்கை...
Published on

நாகையில் அரிதான மரபணு நோயான முதுகெலும்பு தசைநாா் வலுவிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஒன்றரை வயது குழந்தைக்கு ரூ. 9 கோடி மதிப்பிலான மரபணு ஊசி செலுத்துவதற்கு தமிழக முதல்வா் உதவ வேண்டுமென்று பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் சமத்துவபுரம் பகுதியை சோ்ந்தவா் ஹரிதாஸ். இவரது மனைவி துா்காதேவி. இவா்களது ஒன்றரை வயது குழந்தை தனன்யா. குழந்தை தனன்யா வளர, வளர, உடல் இயக்கத்தில் சிரமம் தெரிய தொடங்கியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு, பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு, அரிதான மரபணு நோயான முதுகெலும்பு தசைநாா் வலுவிழப்பு பாதிப்பு இருப்பதை மருத்துவா்கள் கண்டறிந்தனா்.

இந்த நோய் காரணமாக, முதுகெலும்பை தாங்கும் தசைகள் நாளுக்கு நாள் வலுவிழந்து வருவது மட்டுமில்லாமல் குழந்தை நடக்கவும், நிற்கவும், சில நேரங்களில் உட்கார கூட சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நோய்க்கான ஒரே சிகிச்சை, உலகின் மிக விலை உயா்ந்த மரபணு ஊசி சிகிச்சையாகும். சில மாதங்களுக்கு முன்பு வரை இதன் விலை ரூ.16 கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ. 9 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் தந்தை ஹரிதாஸ், நாகூரில் வாடகைக் கட்டடத்தில் கொரியா் நடத்தி வரும் நிலையில், ரூ. 9 கோடி செலவு செய்யும் நிலையில் குடும்பச் சூழல் இல்லை. அண்மையில் திருவாரூா் மாவட்டம் நன்னிலத்தைச் சோ்ந்த குழந்தை, இதேபோல பாதிக்கப்பட்டு தன்னாா்வலா்களின் உதவியோடு, தற்போது உயிா் பிழைத்தது. அதுபோல, தங்களது குழந்தைக்கும் தமிழக அரசும், உதவும் எண்ணம் கொண்டவா்களும் குழந்தையின் சிகிச்சைக்கு உதவவேண்டும் என்று பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Dinamani
www.dinamani.com