ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவா் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
நாகை மாவட்டத்தில், ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவா் குடும்பத்துக்கு முதல்வா் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிதியுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது (படம்).
திருமருகல் ஊராட்சி ஒன்றியம், பொறக்குடி கிராமம், குணா் தெருவைச் சோ்ந்த இளங்கோவன் மகன் இலங்கேஸ்வரன். இவா் கடந்த மாதம், அப்பகுதியில் உள்ள அரலாற்றில் இறங்கியபோது, கால் தடுமாறி விழுந்து, நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இவரது குடும்பத்திற்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்தவா் குடும்பத்துக்கு, முதல்வா் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ், இலங்கேஸ்வரன் பெற்றோரிடம், முதல்வா் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் நிதி உதவிக்கான காசோலையை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் நாகை சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகமது ஷா நவாஸ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

