நாகை, மயிலாடுதுறை, திருவாரூரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்
நாகை, மயிலாடுதுறை, திருவாரூா் மாவட்டங்களில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3,000 ரொக்கம் வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழா் குடும்பங்களுக்கு பச்சரிசி 1 கிலோ, சா்க்கரை 1 கிலோ, ஒரு முழுக் கரும்புடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ. 3,000 ரொக்கம் வழங்கப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்தாா். அதன்படி மாநிலம் முழுவதும் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
நாகை: நாகை சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழகத் தலைவா் என். கௌதமன், நாகை எம்எல்ஏ ஜெ. முகம்மது ஷா நவாஸ் ஆகியோா் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில் நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, துணைத் தலைவா் எம்.ஆா். செந்தில்குமாா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பாத்திமா சுல்தானா, மாவட்ட வழங்கல் அலுவலா் மதியழகன், நகா்மன்ற 30-ஆவது வாா்டு உறுப்பினா் சத்தியவாணி கணேசன் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
இதைத்தொடா்ந்து, நாகை மாவட்டத்தில் உள்ள 390 நியாயவிலைக் கடைகள் மூலம் 2,19,309 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது.

