மன்னார்குடி அருகே இருதரப்பினருக்கிடையே நடந்த கோஷ்டி மோதலில் ஒருவர் காயமடைந்தார். இது தொடர்பாக 2 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கோட்டூர் அடுத்துள்ள காசாங்குளம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் செல்வேந்திரன்(37). அதே பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசீலன்(35). இருவருக்கும் ஆற்றில் மணல் எடுப்பது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், கடந்த தீபாவளி பண்டிகை அன்று, ஜெயசீலனின் உறவினர் வினோத் ,இருசக்கர வாகனத்தில் மேட்டுத்தெரு பகுதியில் வேகமாகச் சென்றாராம். இதை செல்வேந்திரன் தட்டிக் கேட்டதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதையடுத்து, அருகிலிருந்தவர்கள் சமாதானம் செய்து வைத்தனராம்.
வீட்டிற்கு சென்ற வினோத் ,நடந்த சம்பவத்தை குடும்பத்தில் உள்ளவர்களிடம் கூறியதையடுத்து, ஜெயசீலன், வினோத், அவர்களது உறவினர் கலியபெருமாள் ஆகியோர் செல்வேந்திரன் வீட்டிற்கு வந்து பிரச்னை குறித்து பேசினராம். இதில் ஆத்திரமடைந்த மூன்று பேரும் இரும்புக் கம்பியால் தாக்கியதில் காயமடைந்த செல்வேந்திரன் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து கோட்டூர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து கலியபெருமாள்(57), வினோத்(25) ஆகிய 2 பேரையும் வியாழக்கிழமை இரவு கைது செய்து தப்பி ஓடிய ஜெயசீலனை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.