பொறையாறு போக்குவரத்துக்கழக பணிமனை கட்டட விபத்து காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டு தொழிலாளர்கள் கருப்புப்பட்டை அணிந்து பேரணியில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாறில் உள்ள அரசுப் போக்குவரத்துக்கழகப் பணிமனை கட்டட மேற்கூரை இடிந்து விழுந்து ஓட்டுநர், நடத்துநர் 8 பேர் உயிரிழந்தனர். இவ்விபத்துக்குக் காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பெரும்பாலான பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டது.
மாவட்டத்தில், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய பணிமனைகளில் போக்குவரத்து ஊழியர்கள் பணியை புறக்கணித்து கட்டட விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கவில்லை. திருவாரூர் போக்குவரத்துப் பணிமனை கிளைஅலுவலகம் முன் அனைத்துத் தொழிற்சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதேபோல் திருத்துறைப்பூண்டி பணிமனை ஊழியர்கள் 150-க்கும் மேற்பட்டவர்கள் பணியை புறக்கணித்து கருப்புப் பட்டை அணிந்துஅமைதிப் பேரணியில் ஈடுபட்டனர்.