/

குடவாசல் வட்டாரத்தில் வேளாண் இணை இயக்குநர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டாரப் பகுதிகளில் வேளாண் இணை இயக்குநர் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

News image
Updated On :14 மே 2018, 11:58 pm

DIN

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டாரப் பகுதிகளில் வேளாண் இணை இயக்குநர் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டாரத்தில் திருக்குடி, மேலப்பாலையூர் மற்றும் காங்கேய நகரம் ஆகிய பகுதிகளில், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சந்துரு கள ஆய்வு மேற்கொண்டார். இப்பகுதிகளில் சுமார் 100 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் பூச்சு பாதிப்புக் கண்காணிப்பு குறித்து கேட்டறிந்தார். பருத்தி வளர்ச்சி மற்றும் பூ, காய் பிடிப்பு ஆகிய தருணத்தில் உள்ளது. அசுவினிமாவுப்பூச்சிகள் பொருளாதாரச் சேதநிலைக்கு உட்பட்டு இருந்தன. இப்பூச்சிகளின் பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க விவசாயிகளிடம் அறிவுரை வழங்கினார்.
விவசாயிகளிடம் அவர் மேலும் கூறியது: பருத்திக்கு யூரியா உரத்தை அதிக அளவில் இடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆறு வரிசைக்கு ஒரு வரிசை காராமணி, மக்காச்சோளம் ஆகிய பயிர்களை ஊடுபயிராகச் சாகுபடி செய்வதால் பொறிவண்டுகளின் பெருக்கம் அதிகமாகி பருத்தியைத் தாக்கும் அசுவினி, மாவுப்பூச்சி, வெள்ளை ஈக்கள் போன்றவற்றை கட்டுப்படுத்திவிடலாம்
மஞ்சள்நிற ஒட்டு அட்டைகளை ஏக்கருக்கு 20 முதல் 30 எண்கள் வைப்பதால் வெள்ளை ஈக்கள் மற்றும் அசுவினிகளைப் பெருமளவு கட்டுப்படுத்தலாம். ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். சூரிய விளக்குப் பொறிகளை ஏக்கருக்கு ஒன்று வீதம் வைப்பதன் மூலம் பூச்சித் தாக்ககுதல்களைக் கட்டுப்படுத்தலாம். அசாடிராக்டின் என்ற வேப்ப எண்ணெய் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி முற்றும் மீன் எண்ணெய் சம அளவு கலந்து பருத்திச் செடிகளின் மீது தெளிக்க வேண்டும். இதன்மூலம் மாவுப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும் என்றார்.
ஆய்வின்போது, குடவாசல் வேளாண்மை உதவி இயக்குநர் சா. பன்னீர்செல்வம், வேளாண்மை அலுவலர்கள், உதவி அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.