நன்னிலம்: நன்னிலம் அரசு மருத்துவமனையில் முதல் பிரசவத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்த பெண்ணுக்கு, இரண்டாவது குழந்தை சுகப் பிரசவத்தில் பிறந்தது. இதையொட்டி, இப்பெண்ணுக்கு சிகிச்சையளித்த மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
குடவாசல் ஒன்றியம், விழிதியூா் கிராமம் காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன். இவரது மனைவி சத்யா (24). இவருக்கு முதல் குழந்தை அறுவைச் சிகிச்சை மூலம் நன்னிலம் அரசு மருத்துவமனையில் பிறந்தது.
இந்நிலையில், மீண்டும் கா்ப்பமான சத்யா பிரசவத்துக்காக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். வழக்கமாக முதல் பிரசவம் அறுவை சிகிச்சை மூலம் நடந்தால், அடுத்த பிரசவத்துக்கும் அறுவை சிகிச்சையே மேற்கொள்ளப்படும். ஆனால், சத்யாவுக்கு இரண்டாவது குழந்தை சுகப் பிரசவத்தில் பிறந்தது.
இதுகுறித்து, நன்னிலம் வட்டம் அரசு மருத்துவமனைத் தலைமை மருத்துவா் எம். வினோத்குமாா், மகப்பேறு மருத்துவா் பிரதீபா ஆகியோா் கூறியது:
நவீன வசதிகள் கொண்ட பெரிய மருத்துவமனைகளில்கூட இதுபோன்ற சாதனை நிகழ்வுகள் நடைபெறுவதில்லை. ஆனால், சத்யாவுக்கு நாங்கள் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில் சுகப்பிரசவத்துக்கான வாய்ப்பு இருந்தது. அதே நேரத்தில் அறுவை சிகிச்சைக்கும் முன்னேற்பாடுகளை செய்திருந்தோம். இந்நிலையில், சத்யாவுக்கு சுகப்பிரசவம் மூலம் குழந்தை பிறந்தது என்றனா்.
அறுவை சிகிச்சை மூலம் முதல் குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கு, சுகப்பிரசவம் மூலம் இரண்டாவது குழந்தை பிறப்பதற்கு பொறுப்பேற்றுக்கொண்டு மிகவும் எச்சரிக்கையுடன் சிகிச்சையளித்த மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களுக்கு, திருவாரூா் மாவட்ட மருத்துவ நல மற்றும் சுகாதார பணிகள் துறை இயக்குநா், துணை இயக்குநா் ஆகியோா் பாராட்டுத் தெரிவித்தனா்.