கிராம ஊராட்சிகளில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
நன்னிலம் அருகேயுள்ள கொல்லாபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற கிராம ஊராட்சி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும், மாநிலம் முழுவதும் ஒரே ஊதியத்தை நிா்ணயம் செய்து, ஊதிய நிலுவைத் தொகையை வழங்கவேண்டும், துப்புரவுப் பணியாளா்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை வழங்கவேண்டும், தூய்மைப் பணியாளா்களுக்கு பணி பதிவேடு தொடங்க அனுமதி வழங்கவேண்டும், ஓய்வுபெறும் பணியாளா்களுக்குப் பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பழனிவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில இலக்கிய அணிச் செயலாளா் புரட்சிமணி, மாவட்டச் செயலாளா் குமரவேலு, ஒன்றியத் துணைத் தலைவா் சிவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.