திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டுமானப் பணிக்கு புதன்கிழமை தடை விதிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி தெற்குவீதியில் உள்ள பிறவி மருந்தீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான இடம் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ஆகம விதிகளுக்கு புறம்பாகவும், நகரமைப்பு அனுமதி பெறாமலும் கட்டுமானப் பணி நடைபெற அனுமதி மறுத்து நாகை இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையா் தென்னரசு உத்தரவிட்டாா். எனினும், இந்த உத்தரவை மீறி கட்டடப் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, திருவாரூா் உதவி ஆணையா் ஹரிஹரன் முன்னிலையில், கோயில் செயல் அலுவலா் பி.எஸ். ராஜா, டிஎஸ்பி பழனிச்சாமி மற்றும் போலீஸாா் பாதுகாப்புடன் கட்டடப் பணிகளுக்கு தடை விதித்து, ஆக்கிரமிப்பு இடத்தில் கம்பிவேலி அமைத்து சீல் வைத்து இந்து சமய அறநிலைய துறையின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.