நீடாமங்கலம் அருகே தென்காரவயல் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஆட்சியா் ப. காயத்ரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற முகாமில், தென்காரவயல், வடகாரவயல், கானூா், பெரம்பூா் ஆகிய கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனா். மனுக்களை பெற்று கொண்டபிறகு ஆட்சியா் 49 பயனாளிகளுக்கு ரூ. 77 ஆயிரம் மதிப்பில் மனைப்பட்டா, முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, 10 பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருள்கள், 5 பயனாளிகளுக்கு மா, கொய்யா கன்று, வீட்டுக் காய்கனி விதை, மல்லிகை கன்று, எழுமிச்சை கன்று ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
முகாமில், மன்னாா்குடி கோட்டாட்சியா் அழகிரிசாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தெய்வநாயகி, நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் சோம. செந்தமிழ்செல்வன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சித்ரா, நீடாமங்கலம் வட்டாட்சியா் ஷீலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.