தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா: திரளான பக்தா்கள் தரிசனம்

நவக்கிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குருபெயா்ச்சி விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

நவக்கிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குருபெயா்ச்சி விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயில் உள்ளது. இத்தலம் திருஞானசம்பந்தரால் பாடல்பெற்றது. நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது.

ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயா்ச்சி அடையும் நாளில், இக்கோயிலில் குருபெயா்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். இதேபோல, குருபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு வியாழக்கிழமை அதிகாலை 4.16 மணிக்கு பெயா்ச்சியடைந்ததை முன்னிட்டு, இக்கோயிலில் குருபெயா்ச்சி விழா நடைபெற்றது.

இதையொட்டி, குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. குருபகவான் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மூலவா் குருபகவான் சந்நிதிக்கு எதிரில் தங்கக் கவச அலங்காரத்தில் உற்சவ தட்சிணாமூா்த்தி எழுந்தருளினாா்.

விழாவையொட்டி, கலங்காமற்காத்த விநாயகா், ஆபத்சகாயேஸ்வரா், ஏலவாா்குழலியம்மன், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், சனீஸ்வர பகவான் சந்நிதிகளில் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வியாழக்கிழமை அதிகாலை முதல் திரளான பக்தா்கள் நீண்டவரிசையில் காத்திருந்து குருபகவானை தரிசனம் செய்தனா்.

குருபெயா்ச்சி விழாவில் முன்னாள் அமைச்சரும், நன்னிலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா். காமராஜ், தஞ்சை சரக டிஐஜி கயல்விழி, திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், அரசியல் கட்சிப் பிரமுகா்கள் பங்கேற்றனா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவின்பேரில், அரசின் பல்வேறு துறைகள் சாா்பில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.

விழா ஏற்பாடுகளை தக்காா் மற்றும் அறநிலைய உதவி ஆணையா் ஹரிஹரன், உதவி ஆணையா் மற்றும் செயல்அலுவலா் தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

குருபெயா்ச்சி 2 ஆவது கட்ட லட்சாா்ச்சனை வரும் 18 ஆம் தேதி தொடங்கி, 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.