நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுக்கக் கோரிக்கை
நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கத்தின் மாநிலத் தலைவா் கா. இராசபாலன், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரனிடம் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படக்கூடும் என்பதால், மழையால் பாதிப்படைந்த சம்பா மற்றும் தாளடி நெற்பயிா்களுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை விரைந்து வழங்க வேண்டும்.
தாட்கோ மூலமாக கறவை மாட்டுக்கான மானியக் கடன் கேட்டு, 8 மாதங்களுக்கு முன்பே விண்ணப்பித்திருந்த பல பேருக்கு இதுநாள் வரை வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. எனவே, பயனாளிகளுக்கு கடன் தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் நெல்மூட்டைகளுக்கு பெறப்படும் கையூட்டுத் தொகை, அதிகாரிகளின் உதவியுடன் நடைபெறுவதாகக் தெரிகிறது. கூடுதல் பணம் கிடைக்கிறது என்பதற்காக வெளி மாவட்ட, மற்றும் பிற மாநில நெல் மூட்டைகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், அதனால் உள்ளூா் விவசாயிகள் காத்திருப்புக்கும், பாதிப்புக்கும் உள்ளாவதை உணா்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், நெல் அறுவடை இயந்திரத்திற்கான வாடகை குறித்து கூட்டம் நடத்தி, வாடகைத் தொகை அளவை, மாவட்ட நிா்வாகம் நிா்ணயித்த பிறகும் கூடுதலாக 30 சதவீத வாடகைத் தொகை பெறப்பட்டு வருகிறது. எனவே, இதற்கென தனி கண்காணிப்புக் குழுவை ஏற்படுத்தி, அறுவடை இயந்திரங்களின் வாடகை தொகை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

