ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக (எய்ம்ஸ்) மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்று மக்களவையில் திருப்பூர் தொகுதி அதிமுக உறுப்பினர் வி.சத்யபாமா வலியுறுத்தினார்.
இது தொடர்பாக மக்களவையில் பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை அவையின் கவனத்திற்குக் கொண்டு வரும் பூஜ்ய நேரத்தில் அவர் முன்வைத்த கோரிக்கை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த பட்ஜெட்டில் அறிவித்திருந்தது. அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடனடியாக பெருந்துறை உள்பட தமிழகத்தில் ஐந்து இடங்களை இதற்காக தேர்வு செய்து மத்திய அரசிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்தார். மத்தியக் குழுவும் இந்த ஐந்து இடங்களையும் கடந்த ஆண்டு ஏப்ரலில் பார்வையிட்டது. எனினும், தமிழகத்தில் எங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் இந்த விஷயம் தொடர்பாக பிரதமரை வலியுறுத்தியிருந்தார். எய்ம்ஸ் மருத்துவமனை பெருந்துறையில் அமையுமானால் தமிழகத்தில் மேற்கு பகுதி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2 கோடி பேர் பயன் பெறுவர். தவிர, கர்நாடகம், கேரளம் போன்ற அண்டை மாநிலங்களைச் சேர்ந்த ஏழை மக்களும் பயன்பெறுவர்.
மருத்துவ வசதிக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது கொங்கு மண்டல மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கக் கூடியதாக அமையும். எனவே, பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான அறிவிப்பை வெளியிடுவதுடன், கட்டுமானப் பணிகளை உடனே தொடங்க சுகாதாரத் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சத்யபாமா கேட்டுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.