மின்சாரத் திருட்டு வழக்கு: தொழிலதிபருக்கு 2 ஆண்டு கடுங்காவல்; ரூ.21.50 லட்சம் அபராதம்

மின்சாரத்தை திருடியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் கிழக்கு தில்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு கர்கர்டூமா சிறப்பு நீதிமன்றம்  2 ஆண்டு 
Updated on
1 min read

மின்சாரத்தை திருடியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் கிழக்கு தில்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு கர்கர்டூமா சிறப்பு நீதிமன்றம்  2 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூ.21.50 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
கிழக்கு தில்லி கோகுல்புரி கிராமத்தைச் சேர்ந்தவர் பன்வார் சிங்.  தொழிலதிபர். அக்கிராமத்தில் மின்சாரம் திருட்டு தொடர்பாக 2006-ஆம் ஆண்டு மின் விநியோக நிறுவனத்தினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அக்கிராமத்தில்  பன்வார் சிங்,  மின்சாரத்தை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. தொழிலகப் பயன்பாட்டுக்கு 22.6 கிலோ வாட் மின்சாரத்தையும், வீட்டுப் பயன்பாட்டுக்கு 8.8 கிலோவாட் மின்சாரத்தையும் அவர் திருடியது தெரிய வந்தது.
இதற்கான கட்டணத் தொகையான ரூ.11.26 லட்சத்தை செலுத்தக் கோரி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால்,  கட்டணத் தொகையைக் செலுத்த அவர் முன்வரவில்லை. இதைத் தொடர்ந்து,  31 கிலோ வாட் மின்சாரத்தை திருடியதாக  பன்வார் சிங் மீது  மின்சார விநியோக நிறுவனமான பிஎஸ்இஎஸ் போலீஸில் புகார் அளித்தது.  இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
 இது தொடர்பான வழக்கு கர்கர்டூமா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் பன்வார் சிங்குக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும்,  ரூ.21.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதில் வழக்குத் செலவுத் தொகையான ரூ.8.62 லட்சமும் அடங்கும்.
மற்றொரு வழக்கு: இதே போன்று துவாரகா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த மற்றொரு வழக்கில், மின்சாரத் திருட்டு தொடர்பாக வீட்டு வாடகைதாரர் ஒருவருக்கு  ஓராண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.1.33 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com