தில்லி அரசின் சில அதிகாரிகளுக்கும், ரேஷன் மாஃபியா கும்பலுக்கும் இடையே நீண்ட தொடர்பு உள்ளது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
ரேஷன் பொருள்களை வீடுகளுக்கே சென்று அளிக்கும், தில்லி அரசின் கனவுத் திட்டம் தொடர்பான பரிந்துரையை தில்லி தலைமைச் செயலர் கொண்டு வராததால் தில்லி அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் துணை முதல்வர் மணீஷ் சிசோடி கூறுகையில், "வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை அளிக்கும் திட்டம் தொடர்பான பரிந்துரையை கடந்த பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யச் சொல்லியும், தலைமைச் செயலர் தாக்கல் செய்யவில்லை. வியாழக்கிழமை கூட்டத்திலும் அவர் தாக்கல் செய்யவில்லை. இதனால் அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தில்லி அரசின் கனவு திட்டமான இதனைத் தடுத்து நிறுத்த தில்லி அதிகாரிகள் முற்படுகின்றனர். தில்லி அரசு அதிகாரிகளுக்கும், ரேஷன் மாஃபியாக்கும் இடையே நீண்ட தொடர்பு உள்ளது இதன் மூலம் வெளிப்படுகிறது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் குறித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சுட்டுரையில் செய்துள்ள பதிவில், "தில்லி அரசின் சில அதிகாரிகளுக்கும், ரேஷன் மாஃபியா கும்பலுக்கும் இடையே நீண்ட தொடர்பு உள்ளது. இதன் மூலம் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் பலனடைகிறார்கள். இதன் காரணமாகதான் இந்தத் திட்டத்தை செயல்படுத்த விடாமல் அவர்கள் தடுத்து வருகின்றனர்' என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.