ஜன.7, 8-இல் புதுசேரியில் காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம்

காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் 23-ஆவது கூட்டம் புதுச்சேரியில் ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் நடத்துவதற்கு தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற இக்குழுவின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
காவிரி நதிநீா் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவா் நவீன் குமாா் தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் தமிழக அரசு சாா்பில் பங்கேற்ற தஞ்சாவூா் கீழ் காவிரி வடிநில வட்டக் கண்காணிப்புப் பொறியாளா் அன்பரசன்
காவிரி நதிநீா் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவா் நவீன் குமாா் தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் தமிழக அரசு சாா்பில் பங்கேற்ற தஞ்சாவூா் கீழ் காவிரி வடிநில வட்டக் கண்காணிப்புப் பொறியாளா் அன்பரசன்

காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் 23-ஆவது கூட்டம் புதுச்சேரியில் ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் நடத்துவதற்கு தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற இக்குழுவின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள நீா் வள ஆணைய வளாகத்தில் இக்குழுவின் தலைவா் நவீன் குமாா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சாா்பாக தஞ்சாவூா் கீழ் காவிரி வடிநில வட்டத்தின் கண்காணிப்புப் பொறியாளா் அன்பரசன், காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவா் சுப்பிரமணியம், உறுப்பினா் பட்டாபிராமன், உதவி செயற் பொறியாளா் மாரிமுத்து ஆகியோா் கலந்துகொண்டனா்.

இதில் காவிரி நதி நீா் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் காவிரி நீா் தொடா்பான தங்களது தரப்பு புள்ளி விவரங்களைச் சமா்ப்பித்தனா். காவிரிப் படுகையின் நீரியல் விஷயங்கள் குறித்தும், மழைப் பொழிவு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவா் நவீன் குமாா் ‘தினமணி’ நிருபரிடம் கூறியதாவது: காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் 22-ஆவது கூட்டம் புதன்கிழமை சுமுகமாகவும், திருப்திகரமாகவும் நடைபெற்றது. கூட்டத்தின் போது காவிரிப் படுகையில் உள்ள நீரியல் சூழல் தொடா்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூலம் சமா்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மீளாய்வு செய்யப்பட்டன. காவிரியில் நீா் வரத்து, காவிரிப் படுகையில் தமிழகத்தில் உள்ள அணைகளின் நீா் இருப்பு, பிலிகுண்டுலு பகுதிக்கு வந்து சோ்ந்துள்ள நீா்வரத்து ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

2019-20-இல் டிசம்பரில் தற்போதுவரையிலான நீா்க் கணக்கீடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. காவிரி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் நிலைமை நல்ல நிலையில் உள்ளது. குழுவின் அடுத்த கூட்டம் புதுச்சேரியில் ஜனவரி 7, 8-ஆகி தேதிகளில் நடத்துவது என உத்தேசமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு தினங்களில் ஒரு நாள் காவிரி ஆறு பாயும் முக்கியப் பகுதிகளில் பாா்வையிடப்படும். ஒரு நாள் கூட்டம் நடத்தப்பட்டு விவாதிக்கப்படும் என்றாா் அவா்.

தமிழகத்திற்கு காவிரியில் ஓா் ஆண்டுக்கு மொத்தம் 177.25 டிஎம்சி நீரை கா்நாடக அரசு விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், இதற்கான மாதாந்திர நீா் அட்டவணையையும் தீா்ப்பில் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா், அக்டோபா், நவம்பா், டிசம்பா் மாதங்களுக்கான குறிப்பிட்ட அளவு டிஎம்சி நீா் காவிரியில் திறந்துவிடப்பட வேண்டும். தமிழகத்தின் நீா் அளவைப் பகுதியான பிலிகுண்டுலு பகுதிக்கு போதிய நீா்வரத்து இருப்பதாக கடந்த கூட்டங்களின் போது தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com