உலக சாதனை முயற்சி: 5 ஆயிரம் கிலோ கிச்சடி சமைத்தது தில்லி பாஜக

தில்லி பாஜகவின் ஒடுக்கப்பட்டோர் பிரிவு சார்பில் "பீம் மகா சங்கம்' என்ற பெயரில் தில்லி ராம் லீலா மைதானத்தில்

தில்லி பாஜகவின் ஒடுக்கப்பட்டோர் பிரிவு சார்பில் "பீம் மகா சங்கம்' என்ற பெயரில் தில்லி ராம் லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் கின்னஸ் சாதனையில் இடம் பெறும் வகையில் 5,000 கிலோ கிச்சடி தயாரிக்கப்பட்டது. இது ராம்லீலா மைதானத்தில் குழுமிய சுமார் 25,000 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. 
"இந்தக் கிச்சடியைத் தயாரிக்க 400 கிலோ அரிசி, 100 கிலோ பயறு, 350 கிலோ காய்கறி, 100 கிலோ நெய், 100 லிட்டர் எண்ணெய், 2,500 லிட்டர் தண்ணீர், 250 கிலோ மசாலா ஆகியவை பயன்படுத்தப்பட்டன. 
இவை 3 லட்சம் ஒடுக்கப்பட்டோர் குடும்பங்களில் இருந்து பெறப்பட்டன. ஜாதி ரீதியான ஏற்றத் தாழ்வுகளைக் களைந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
நாக்பூரில் விஷ்ணு மனோகர் என்பவர் சமைத்த 3,000 கிலோ கிச்சடிதான் உலக சாதனையாக பதிவாகி உள்ளது. தற்போது 5,000 கிலோ கிச்சடியை விஷ்ணு 
மனோகரே தில்லியில் சமைத்
துள்ளார்' என்று தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி தெரிவித்தார். 
மத்திய அமைச்சர் ஷர்ஷ் வர்தன் பேசுகையில், "இந்த நிகழ்வு மூலம் "வேற்றுமையில் ஒற்றுமை' என்ற முக்கிய செய்தியை தில்லி பாஜக கூறியுள்ளது. நாட்டை ஜாதி, மத அடிப்படையில் பிரிக்க நினைப்பவர்களுக்கு தக்க பதிலடியை இந்த நிகழ்வு மூலம் தில்லி பாஜக தெரிவித்துள்ளது' என்றார்.  
மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட் பேசுகையில் "வெளிநாட்டில் அதிக ஊதியத்தில் கிடைத்த வேலையை உதறிவிட்டு அம்பேத்கர் நாடு திரும்பினார். நாட்டுப்பற்றுக்கு சிறந்த உதாரணம் அவரே' என்றார். 
இந்தப் பேரணியில் மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தன், தாவர்சந்த் கெலாட், விஜய் கோயல், தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, தில்லி பாஜக ஒடுக்கப்பட்டோர் பிரிவுத் தலைவர் மோகன் லால் கிஹாரா, பாஜக தேசியச் செயலர் ராம் லால், பாஜக எம்பி பர்வீஷ் வர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


உதித்ராஜ் எம்பி புறக்கணிப்பு
இது போன்ற சமத்துவக் கிச்சடிகளால் தலித் மக்களின் ஆதரவைப் பெற முடியாது என்று மேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினரும் அனைத்திந்திய எஸ்.சி, எஸ்.டி. அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவருமான உதித் ராஜ் தெரிவித்துள்ளார். மேலும், தனது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் இந்த நிகழ்விலும் அவர் கலந்து கொள்ளவில்லை. 
இது தொடர்பாக அவர் கூறுகையில், "தலித் வீடுகளில் உணவு உண்டால் தலித் மக்களின் ஆதரவைப் பெறலாம் என்பதெல்லாம் காலாவதியான திட்டங்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இதே போன்று முயற்சித்து தோல்வியடைந்துள்ளார். தலித் வீடுகளில் அரிசி, பருப்பைப் பெற்று சமையல் செய்தால் அது தலித் மக்களை மேலும் அன்னியப்படுத்தவே செய்யும்' என்றார்.
இந்தக் கூட்டத்தில் உதித்ராஜ் கலந்து கொள்ளாதது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பதிலளிக்கையில், "இங்கே தலித் தலைவர்கள் பலர் உள்ளார்களே? தலித் தலைவரும் மத்திய அமைச்சருமான தாவர்சந்த் கெலாட் வந்துள்ளாரே? மற்றவர்கள் வந்தார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com