ரூ. 1 கோடி தங்கம் கடத்தல்:பிலிப்பின்ஸ் விமானப் பயணி கைது
By DIN | Published On : 06th March 2019 11:53 PM | Last Updated : 06th March 2019 11:53 PM | அ+அ அ- |

இந்தியாவுக்கு ரூ.1 கோடி தங்கத்தை கடத்த முயன்றதாக பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த விமானப் பயணியை தில்லி விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து தில்லி இந்திரா காந்தி விமான நிலைய சுங்கத் துறையினர் புதன்கிழமை தெரிவித்ததாவது:
ஹனோய் நகரில் இருந்து பாங்காக் வழியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த 30 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவரின் உடைமைகள் சோதனைக்கு உள்படுத்தப்பட்டன.
அவர் அணிந்திருந்த ஆடையின் உள்பகுதியில் கருப்புநிற வெல்வெட் துணிப் பையில் தலா 1 கிலோ எடையுள்ள 3 தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
அவர் பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து ரூ.97.98 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.