50 சதவீத வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை எண்ண வேண்டும்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்
By DIN | Published On : 19th May 2019 03:27 AM | Last Updated : 19th May 2019 03:27 AM | அ+அ அ- |

50 சதவீத வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை எண்ண வேண்டும் என்று ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இதுகுறித்து அவர் பேசியதாவது:
நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் என்ன காரணத்தினால் திரும்ப பெறப்பட்டது? புதிதாக ரூ.500, ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் விடவே அந்த நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. இந்த நோட்டுகளை கொண்டு, வாக்குகளை விலைக்கு வாங்க முடியும். வாக்காளர்கள் ஒவ்வொரு வாக்குக்கும் பணம் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக, தபால் வாக்குகளுக்கு பணம் எதிர்பார்க்கிறார்கள்.
நிதியை திரட்டுவதற்கு அரசியல் கட்சிகளுக்கு உதவும் வகையிலேயே தேர்தல் பத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் இதனால் எந்த பயனும் இல்லை. சில அரசியல் கட்சிகள் மட்டும்தான், இந்த வழியில் நிதி திரட்டுகின்றன. அனைத்து கட்சிகளும் இதை செய்யவில்லை.
தேர்தலில் யாருக்கு வெற்றி, தோல்வி என்பதை பொருட்படுத்தாமல், தேர்தல் நியாயமாக நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் எண்ணப்படுகின்றன. பின்னர் 5 வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை மட்டும் எடுத்து சரிபார்க்கப்படுகிறது. இதுபோல்தான், அனைத்து தொகுதிகளிலும் நடக்கிறது. இதில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன. ஆதலால், அனைத்து தொகுதிகளிலும் 50 சதவீத வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை எண்ண வேண்டும். அதுவும் வாக்குச்சாவடி முகவர் முன்னிலையில் அந்த பணி நடைபெற வேண்டும்.
இந்த பணி நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுவதை தேர்தல் கண்காணிப்பாளர் உறுதி செய்ய வேண்டும் என்றார் சந்திரபாபு நாயுடு.
நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோகுர், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் நவீன் சாவ்லா, எஸ்.ஒய். குரேஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.