தலைநகரில் ரூ.40 கோடி ஹெராயின் பறிமுதல்: இருவர் கைது
By DIN | Published On : 22nd September 2019 01:15 AM | Last Updated : 22nd September 2019 01:15 AM | அ+அ அ- |

தில்லியில் ரூ.40 கோடி மதிப்புள்ள 10.5 கிலோ ஹெராயின் போதைப் பொருளுடன் 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள், பைஜிலூர் ரஹ்மான் (28) மற்றும் அபு பக்கர் சித்திக் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இருவரும் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இது குறித்து காவல் துணை ஆணையர் (சிறப்புப் பிரிவு) சஞ்சீவ் குமார் யாதவ் கூறியதாவது:
மாநிலங்களுக்கிடையே போதைப் பொருள் கடத்தும் கும்பலின் தலைவனாக செயல்பட்டு வருபவர் சைதுல். இவர், மணிப்பூரைச் சேர்ந்த நசீர் என்பவரிடமிருந்து தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை வாங்கி மேற்கு வங்கத்தில் உள்ள மால்டாவுக்கும், தில்லி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கும் கொண்டு செல்வதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதில் நசீர், மியான்மரிலிருந்து போதைப் பொருள்களை வாங்குகிறார் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், சைதுலின் அறிவுறுத்தலின் பேரில் ரஹ்மானும், சித்திக்கும் தில்லியில் உள்ள மஜ்னு கா திலா பகுதிக்கு ஒரு டிரக்கில் வந்து கொண்டிருப்பதாக கடந்த புதன்கிழமை தகவல் கிடைத்தது.
அவர்கள், தில்லியில் உள்ள தங்களது வாடிக்கையாளர்களுக்கு போதைப் பொருள்களை விநியோகிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டது.
இதையடுத்து, அப்பகுதியில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அங்கு வந்த இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10.5 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு ரூ.40 கோடி ஆகும்.
இந்த போதைப்பொருளை குவாஹாட்டியில் சைதுலிடமிருந்து அவர்கள் பெற்றதும், தில்லியில் விநியோகிக்கிக்கப்பட இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது என்றார் அந்த அதிகாரி.