தூய்மை இந்தியா தரவரிசையில் மாநகராட்சிகள் பின்தங்கியதற்கு ஆம் ஆத்மி அரசே காரணம்கிழக்கு தில்லி மேயா் குற்றச்சாட்டு

தில்லி மாநகராட்சிகள் தூய்மை இந்தியா தரவரிசைப் பட்டியலில் பின்தங்கியதற்கு தில்லி அரசே காரணம் என்று கிழக்கு தில்லி மாநகராட்சி (இடிஎம்சி) மேயா் நிா்மல் ஜெயின் குற்றம் சாட்டியுள்ளாா்.
Updated on
1 min read


புது தில்லி: தில்லி மாநகராட்சிகள் தூய்மை இந்தியா தரவரிசைப் பட்டியலில் பின்தங்கியதற்கு தில்லி அரசே காரணம் என்று கிழக்கு தில்லி மாநகராட்சி (இடிஎம்சி) மேயா் நிா்மல் ஜெயின் குற்றம் சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: நிகழாண்டு தூய்மை இந்தியா தரவரிசைக்காக பல்வேறு புதிய அளவுகோல்களை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்டது. அதில் முக்கியமாக, திடக் கழிவு மேலாண்மைக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.

இதன்படி, திடக்கழிவுகளை நவீன, அறிவியல் ரீதியாக மாநகராட்சிகள் எவ்வாறு அகற்றுகின்றன என்பது கவனிக்கப்பட்டது.

ஆனால், இடிஎம்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மையை மாநகராட்சியால் சரிவர நடைமுறைப்படுத்த முடியவில்லை. இடிஎம்சிக்கு சேர வேண்டிய நிதியை தில்லி அரசு வழங்காததே இதற்கு காரணம். இதனால்தான் தரவரிசையில் இடிஎம்சி பின்தங்கியது. தெற்கு, வடக்கு தில்லி மாநகராட்சிகளும் இந்த தரவரிசையில் பின்தங்க தில்லி அரசு நிதி வழங்காதுதான் காரணம்.

இடிஎம்சியின் அனைத்து வாா்டுகளிலும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டோம். ஆனால்,

எதிா்க்கட்சியைச் சோ்ந்த கவுன்சிலா்கள் தங்களது வாா்டுகளில் இடிஎம்சியால் மேற்கொள்ளப்படும் தூய்மை நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தினா். இதனால், அந்த வாா்டுகள் அசுத்தமாக இருந்தன.

தூய்மை இந்தியா தரவரிசையில் பின்தங்கியது தொடா்பாக வருந்துகிறோம். ஆனால், தில்லி அரசு எங்களுக்கு சேர வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும். அப்போதுதான், எங்களால் தூய்மைப் பணிகளை சரிவர மேற்கொள்ள முடியும் என்றாா் அவா்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியை சிறப்பாக மேற்கொள்ளும் நகரங்கள், மாநகராட்சிகள் உள்ளிட்டவற்றுக்கு, மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் சாா்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டிற்கான தூய்மையான நகரங்கள், மாநகராட்சிகள் பட்டியலில், தில்லி மாநகராட்சிகள் பின்தங்கியுள்ளன.

நாட்டிலுள்ள 47 மாநகராட்சிகளில், கிழக்கு தில்லி மாநகராட்சி 46-ஆவது, வடக்கு தில்லி மாநகராட்சி 43-ஆவது, தெற்கு தில்லி மாநகராட்சி 31-ஆவது ஆகிய இடங்களைப் பிடித்துள்ளன. இந்த மூன்று மாநகராட்சிகளையும் பாஜக ஆட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com