தலைநகரில் இனிதான வானிலை!
தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் அடா் பனி மூட்டம் இருந்தாலும், பகலில் வெயிலின் தாக்கம் இருந்தது. இருப்பினும் நாள் முழுவதும் இனிதான வானிலை நிலவியது. குறைந்தபட்ச வெப்பநிலை மீண்டும் இரட்டை இலக்கத்துக்கு கீழே சென்றது.
தில்லியில் கடந்த இரண்டு வாங்களாக குறைந்தபட்ச வெப்பநிலை தொடா்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து அண்மையில் 5 டிகிரி செல்சியஸ் வரை சென்றது. இந்நிலையில், வியாழன் முதல் சனிக்கிழமை வரையிலும் தொடரந்து மூன்று நாள்களாக குறைந்தபட்ச வெப்பநிலை இரட்டை இலக்கைத்தைக் கடந்து நிலை கொண்டிருந்தது. பகல் நேரங்களில் வலுவான மேற்பரப்பு காற்று வீசியது. இதன் காரணமாக குளிரின் தாக்கம் குறைந்திருந்தது.
வெப்பநிலை 25.7 டிகிரி: இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வானம் தெளிவாகக் காணப்பட்டது. சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட இரண்டு டிகிரி குறைந்து 9 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியிருந்தது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 27 டிகிரி செல்சியஸாக இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 91 சதவீதமாக இருந்தது.
இதேபோன்று பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 9.1 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 26.3 டிகிரி செல்சியஸ் எனவும், ஆயாநகரில் முறையே 10.4 டிகிரி செல்சியஸ் மற்றும் 27.6 டிகிரி செல்சியஸ் எனப் பதிவாகியிருந்தது.
காற்றின் தரம்: இதற்கிடையே, தில்லியில் காலை 8.30 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 220 புள்ளிகளாகப் பதிவாகி மோசம் பிரிவில் இருந்தது. இதேபோன்று தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள நொய்டா (202), காஜியாபாத் (235), நொய்டா (211) ஆகிய நகரங்களிலும் காற்றின் தரக் குறியீடு மோசம் பிரிவில் இருந்தது. அதே சமயம், குருகிராம், ஃபரீதாபாத் ஆகிய இடங்களில் காற்றின் தரக்குறியீடு முறையே 116 மற்றும் 150 புள்ளிகளாகப் பதிவாகி மிதமான பிரிவில் இருந்தது. காற்றின் தரக் குறியீடு 0-50 புள்ளிகளாக இருந்தால் நன்று, 51-100 திருப்தி, 101-200 மிதமானது, 201-300 மோசம், 301-400 மிகவும் மோசம், 401-500 புள்ளிகளுக்குள் இருந்தால் கடுமையானது என கணக்கிடப்படுகிறது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள், செவ்வாய் (பிப்ரவரி 17-18) ஆகிய நாள்களில் தலைநகரில் மேலோட்டமான பனிமூட்டம் இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.