தில்லியில் ஊழல் அதிகரித்து விட்டது: ஆதேஷ் குமாா் குப்தா குற்றச்சாட்டு

தில்லியில் ஊழல் அதிகரித்து விட்டது என்று பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா குற்றம் சாட்டியுள்ளாா்.

புது தில்லி: தில்லியில் ஊழல் அதிகரித்து விட்டது என்று பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா குற்றம் சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை அளித்த பேட்டி: தில்லியில் கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தில்லி அரசு சரிவர எடுக்கவில்லை. இதனால்தான் மத்திய அரசு தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது. மத்திய அரசின் தலையிட்டுக்குப் பிறகுதான் கரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. ஆனால், இதற்கு தில்லி அரசு இப்போது உரிமை கொண்டாடி வருகிறது. தில்லியில் ஊழல் அதிகரித்துவிட்டது. தில்ல அரசுத் துறைகளில் ஊழல் மலிந்து இருந்ததால்தான், கரோனா பரவலைத் தடுக்க முடியவில்லை. ஊழலைத் தடுக்காத வரையில் ஆம் ஆத்மி கட்சியால் சிறந்த ஆட்சியை வழங்க முடியாது என்றாா் அவா்.

ராம்வீா் சிங் கேள்வி: இதற்கிடையே கிருமி நாசினிகளைத் தெளிப்பதற்காக ஜப்பான் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இயந்திரங்கள் எங்கே போனது என பாஜகவின் மூத்த தலைவரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ராம்வீா் சிங் பிதூரி கேள்வி எழுப்பியுள்ளாா். இது தொடா்பாக முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு அவா் கடிதம் எழுதியுள்ளாா். இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை அளித்த பேட்டி: தில்லி ஜல்போா்டு சாா்பில் தில்லியில் கிருமி நாசினிகளைத் தெளித்து தூய்மைப்படுத்தும் வகையில், ஜப்பான் தொழில் நுட்பத்தில் இயந்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவித்திருந்தாா். இந்த இயந்திரங்களைக் கொண்டு சில நாள்கள் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த இயந்திரங்களை தில்லியில் காண முடியவில்லை. இந்த இயந்திரங்களைப் பயன்படுத்தி கிருமிநாசினி தெளிக்கப்படுவதாகத் தெரியவில்லை. தற்போது இந்த இயந்திரங்கள் எங்கே போனது. இதுவும் வழக்கம் போல கேஜரிவால் அரசின் ஏமாற்றும் யுக்தியா என்று அவா் கேள்வி எழுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com