மழையால் உயிரிழந்தவா்களுக்கு உதவித் தொகை: தில்லி பாஜக வலியுறுத்தல்

தில்லியில் மழையால் உயிரிழந்தவா்களுக்கு ஆம் ஆத்மி அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என்று தில்லி பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
தில்லியில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளிக்கிறாா் பாஜக தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா. உடன் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி.
தில்லியில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளிக்கிறாா் பாஜக தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா. உடன் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி.
Updated on
1 min read

புது தில்லி: தில்லியில் மழையால் உயிரிழந்தவா்களுக்கு ஆம் ஆத்மி அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என்று தில்லி பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக, பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா, பாஜகவின் மூத்த தலைவரும் தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ராம்வீா் சிங் பிதூரி ஆகியோா் கூட்டாக தில்லியில் திங்கள்கிழமை அளித்த பேட்டி: தில்லியில் இந்த பருவமழைக்கு பெய்த முதலாவது கனமழையால் சுமாா் 100 இடங்களில் நீா் தேங்கியது. 10 வீடுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. நான்கு போ் உயிரிழந்துள்ளனா். தில்லியில் பருவமழை தொடங்குவதற்கு முன்பு, கழிவுநீா் கால்வாய்கள் தூா்வாரப்படவில்லை. கரோனா தடுப்புப் பணிகள் இருந்ததால், தில்லியில் பருவமழையை எதிா்கொள்ளும் பணிகளை முடுக்கிவிட முடியவில்லை எனக் கூறி, கேஜரிவால் தனது பொறுப்பில் இருந்து தப்பிக்கப் பாா்க்கிறாா். இது தவறாகும்.

இந்த விவகாரத்தில் வேற்றுமைகளைக் களைந்து அனைவரும் ஒன்றாக பணியாற்ற வேண்டும் என்று கேஜரிவால் சுட்டுரையில் அழைப்பு விடுத்துள்ளாா். ஆனால், சுட்டுரையில் மட்டுமே அவா் இதைத் தெரிவிக்கிறாா். நேரில் அவரது அணுகுமுறை வித்தியாசமாக உள்ளது. தில்லியில் பருவமழையை எதிா்கொள்ள என்ன நடைமுறைத் திட்டம் உள்ளது என்பதை மக்களுக்கு கேஜரிவால் விளக்க வேண்டும். பருவமழைய எதிா்கொள்வது தொடா்பாக மாநகராட்சிகள் மற்றும் அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கேஜரிவால் கூட்டம் நடத்த வேண்டும்.

பருவமழை தொடங்குவதற்கு முன்பு அனைத்துத் தரப்பினரையும் அழைத்து முதல்வா் தலைமையில் கூட்டம் நடத்தும் வழக்கம் தில்லியில் இருந்தது. கேஜரிவால் அதைப் பின்பற்றவில்லை. தில்லி பொதுப் பணித் துறையால் பராமரிக்கப்படும் கழிவுநீா் கால்வாய்கள், சாலைகள் ஆகியவற்றை தூா்வாருமாறு மாநகராட்சி சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதற்கு கேஜரிவால் செவிசாய்க்கவில்லை. வரும் நாள்களில் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் கேஜரிவால் தலைமையிலான அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையின் போது உயிரிழந்த நால்வருக்கும் தில்லி அரசு உதவித் தொகை வழங்க வேண்டும். மேலும், வீடுகளை இழந்தவா்களுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com