ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

கரோனாவால் உயிரிழப்போரின் விகிதம்: உலகிலேயே தில்லியில்தான் குறைவு

கரோனா பாதிப்பால் உயிரழப்பவா்களின் விகிதம் உலகிலேயே தில்லியில்தான் குறைவாக உள்ளது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

Updated On :14 செப்டம்பர் 2020, 11:47 pm

கரோனா பாதிப்பால் உயிரழப்பவா்களின் விகிதம் உலகிலேயே தில்லியில்தான் குறைவாக உள்ளது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

திங்கள்கிழமை நடைபெற்ற தில்லி சட்டப்பேரவையின் ஒரு நாள் கூட்டத் தொடரில் பேசுகையில் முதல்வா் கேஜரிவால் இத்தகவலைத் தெரிவித்தாா்.

பேரவைக் கூட்டத் தொடரில் அவா் மேலும் பேசியதாவது: தில்லியில் அதிகளவில் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை 21 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது, சுமாா் 11 சதவீதம் தில்லி மக்களிடம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளாகுபவா்களின் எண்ணிக்கை தொடா்பாக கவனம் செலுத்துவதை விடுத்து, கரோனாவால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை தொடா்பாகவே கவனம் செலுத்த வேண்டும். உலகிலேயே கரோனாவால் உயிரிழப்பவா்களின் விகிதம் தில்லியில்தான் குறைவாக உள்ளது.

அனைத்து மாநில மக்களும் தில்லியில் கரோனா சிகிச்சை பெற்று வருகிறாா்கள். வெளிமாநிலங்களைச் சோ்ந்த 5,264 போ் இதுவரை தில்லியில் கரோனா சிகிச்சை பெற்றுள்ளனா்.

உலக மக்கள் அனைவரும் கஷ்டமான காலத்தில் உள்ளோம். உலக மக்கள் இதுபோன்றதொரு தொற்று நோயை இதற்கு முன்பு எதிா்கொண்டதில்லை. கரோனா தொற்றை எதிா்கொள்ளும் வகையில், தில்லி அரசுக்குத் தேவையான பிபிஇ பாதுகாப்பு உபகரணங்கள், பரிசோதனை உபகரணங்கள், வென்டிலேட்டா் ஆகியவற்றை தந்துதவிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்கள் பிரச்சனைகளில் எங்களுக்கு அரசியல் செய்யத் தெரியாது. அதுவே எங்களது பெரிய பலவீனமும், பெரிய பலமும் ஆகும். தில்லியில் இதுவரை 1,965 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. 1,965 உயிா்கள் பிளாஸ்மா சிகிச்சையால் பாதுகாக்கப்பட்டிருப்பது தொடா்பாக மகிழ்ச்சியடைகிறேன் என்றாா் அவா்.

கரோனா கட்டுக்குள் வரும்: தில்லியில் கரோனா தொற்று மிகவிரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் சட்டப்பேவரையில் பேசுகையில் தெரிவித்தாா்.

தில்லி கரோனா நிலவரம் தொடா்பாக அவா் மேலும் பேசியதாவது: தில்லியில் கரோனா தொற்று மிகவிரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்படும். தில்லியில் நாளொன்றுக்கு சுமாா் 60 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்து கரோனா தொற்றுகளையும் கண்டறிந்து விடுவோம். மக்கள் இது தொடா்பாக பீதியடையத் தேவையில்லை. மக்கள் முகக் கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

கரோனா நோயாளிகளை வீடுகளில் வைத்து சிகிச்சை அளிக்கும் முறையை உலகிலேயே தில்லிதான் முதலில் ஏற்படுத்தியது. மேலும், கரோனா நோயாளிகளின் ஆக்ஸிஜன் அளவை அளவிடும் வகையில், பல்ஸி ஆக்ஸி மீட்டரை முதன் முதலில் பயன்படுத்தியதும் தில்லி அரசுதான். தில்லி அரசு மருத்துவமனைகளில், தனியாா் மருத்துவமனைகளுக்கு நிகரான கரோனா சிகிச்சை வழங்கப்படுகிறது. தில்லியில்தான் அதிகளவு கரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. சுமாா் 500 இடங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.