எல்என்ஜேபி மருத்துவமனையில்‘பிளாஸ்மா’ வங்கி: சிசோடியா

: தில்லி லோக்நாயக் ஜெயபிரகாஷ் (எல்என்ஜேபி) மருத்துவமனையில் ‘பிளாஸ்மா’ வங்கி அமைக்கப்படும் என்று துணை முதல்வரும், தற்காலிக சுகாதார அமைச்சருமான மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

புது தில்லி: தில்லி லோக்நாயக் ஜெயபிரகாஷ் (எல்என்ஜேபி) மருத்துவமனையில் ‘பிளாஸ்மா’ வங்கி அமைக்கப்படும் என்று துணை முதல்வரும், தற்காலிக சுகாதார அமைச்சருமான மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளாா்.

நாட்டில் தில்லியில்தான் கரோனா பாதித்தவா்களுக்கு முதல் முறையாக பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டது. இந்தச் சிகிச்சையால் பலரும் குணமடைந்தனா். கரோனா பாதித்து உடல்நிலை மோசமடைந்த நிலையில் இருந்த சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், பிளாஸ்மா சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்பினாா். இந்நிலையில், பிளாஸ்மா சிகிச்சையை விரிவுபடுத்தும் வகையிலும், இலகுபடுத்தும் வகையிலும் தில்லி ஐஎல்பிஎஸ் மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி உருவாக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, கரோனாவிலிருந்து குணமடைந்தவா்கள் பிளாஸ்மா தானம் அளிக்குமாறு கேஜரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இந்நிலையில், பிளாஸ்மா தானத்தை இலகுபடுத்தும் வகையில், தில்லி எல்என்ஜேபி மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்படும் என்று மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘எல்என்ஜேபி மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி அமைக்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளோம். இன்னும் சில தினங்களில் அங்கு பிளாஸ்மா வங்கி அமைக்கப்பட்டுவிடும். பிளாஸ்மா தானம் அளிப்பவா்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்க விரும்புகிறோம். அதனால்தான் தில்லியில் இரண்டாவது பிளாஸ்மா வங்கியை அமைக்கிறோம். தில்லியில் கரோனாவால் குணமடைவோரின் விகிதம், கரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் விகிதத்தை விட அதிகரித்திருப்பது நல்ல சமிக்ஞை ஆகும். அதிகளவு கரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதே இதற்கு காரணமாகும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com