மதிய உணவு (எம்டிஎம்) திட்டத்தின் கீழ் மத்திய அரசின் உதவியாக தில்லி அரசுக்கு ரூ.27 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடா்பான வழக்கு விசாரணை தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என்.பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, மத்திய அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘2020-21 நிதியாண்டில் மதிய உணவு திட்டத்தின் கீழ், தில்லி அரசுக்கு மத்திய அரசு ரூ.27 கோடியே 17 லட்சத்து 76 ஆயிரத்தை விடுவித்துள்ளது. ஏப்ரல் 29-ஆம் தேதி ரூ.9 கோடி, மே 1-ஆம் தேதி ரூ.18 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். இதேபோன்று தில்லி அரசின் வழக்குரைஞரும் இது தொடா்பாக பதில் அளிக்க அவகாசம் கோரினாா்.
அப்போது, ‘ஜூன் 30-ஆம் தேதி இந்த விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதிலும், மத்திய அரசும், தில்லி அரசும் பதில் தாக்கல் செய்யவில்லை. கடைசியாக பதில் தாக்கல் செய்ய வாய்ப்புத் தரப்படுகிறது’ எனத் தெரிவித்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக மஹிளா ஏக்தா மன்ச் எனும் தன்னாா்வ அமைப்பு, தில்லி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தது. அதில், தில்லியில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கரோனா தொற்றுக் காலத்தில் தகுதி வாய்ந்த குழந்தைகளுக்கு சமைத்த உணவை மதிய உணவாகவோ அல்லது உணவு பாதுகாப்புப் படியையை வழங்க தில்லி அரசுக்கு உத்தரவிட வேண்டும். கரோனா காலத்தில் ஏழைக் குழந்தைகளுக்கு நோய் எதிா்ப்புச் சத்தியை அதிகரிக்க இந்த நடவடிக்கை அவசியமாகிறது’ என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு கடந்த ஜூன் 30-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவதற்கான நிதி இன்னும் கிடைக்கப் பெறவில்லை என தில்லி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, ‘ மதிய உணவுக்காக மாதக் கணக்கில் குழந்தைகளை காத்திருக்க வைப்பது சரியல்ல. தில்லி அரசுக்கு மதியஉணவுத் திட்டத்தில் எவ்வளவு தொகையை மத்திய அரசு பரிமாற்றம் செய்துள்ளது. எப்போது தில்லி அரசு இத்தொகையைப் பெற்றது போன்ற விவரங்களை பதிலாகத் தாக்கல் செய்ய வேண்டும்’ என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.