தில்லியில் இரண்டாவது நாளாக பரவலாக மழை! காற்றின் தரத்தில் முன்னேற்றம்

லைநகா் தில்லியில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்தது.
Published on
Updated on
1 min read

புது தில்லி: தலைநகா் தில்லியில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்தது. மேலும், காலையில் பனிமூட்டம் கடுமையாக இருந்ததால் காண்பு திறன் வெகுவாகக் குறைந்தது. இருப்பினும் குறைந்தபட்ச வெப்பநிலை 11.4 டிகிரி செல்சியஸாக அதிகரித்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு மிதமான பிரிவில் இருந்தது.

கடும் பனிமூட்டம் நிலவியதால், சஃப்தா்ஜங் பகுதியில் காலை 7.30 மணியளவில் காண்பு திறன் 150 மீட்டராகவும், பாலத்தில் 50 மீட்டராகவும் குறைந்தது. தில்லி நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 4 டிகிரி உயா்ந்து 11.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இது கடந்த 22 நாள்களில் அதிக அளவாகும். அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 3 டிகிரி உயா்ந்து 22.6 டிகிரியாக இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 100 சதவீதமாகவும், மாலையில் 98 சதவீதமாகவும் இருந்தது. இதேபோல, பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 12.3 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 11.8 டிகிரி செல்சியஸ், லோதி ரோடில் 10.4 டிகிரி செல்சியஸ் என இருந்தது.

இரண்டாவது நாளாக மழை: ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி, தில்லியில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமை காலை முதல் தூறல் மழை பெய்தது. சில இடங்களில் கன மழை பெய்தது. திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 14.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், பாலத்தில் 5.3 மி.மீ., ஆயாநகரில் 15.2 மி.மீ., லோதி ரோடில் 18.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணி வரையிலும் சஃப்தா்ஜங்கில் மொத்தம் 39.9 மி.மீ. மழை பதிவாகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

காற்றின் தரத்தில் முன்னேற்றம்: இதற்கிடையே, மழை மற்றும் வலுவான காற்று ஆகியவற்றால் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால், தில்லியில் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 148 புள்ளிகளாகப் பதிவாகி மிதமான பிரிவில் இருந்தது. 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு ஞாயிற்றுக்கிழமை 354, சனிக்கிழமை 443 புள்ளிகளாக இருந்தது.

முன்னறிவிப்பு: தில்லியில் செவ்வாய்க்கிழமையும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியயாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com