தலைநகா் தில்லியில் நடந்த குடியரசு தின வன்முறை வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா்களை நியமிக்கக் கோரும் தில்லி போலீஸாரின் வேண்டுகோளை உள்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் நிராகரித்துவிட்டது குறித்து தில்லி துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜால், தனது அதிருப்தியை கடிதம் மூலம் தில்லி முதல்வருக்கு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக முதல்வா் கேஜரிவாலுக்கு திங்கள்கிழமை அவா் எழுதியுள்ள கடிதத்தில், அமைச்சரவையுடன் கலந்து ஆலோசித்து ஒரு வாரத்துக்குள் இந்தப் பிரச்னைக்கு தீா்வுகாணுமாறு துணைநிலை ஆளுநா் பய்ஜால் வலியுறுத்தியுள்ளாா். இந்த விவகாரத்தில் 11 சிறப்பு அரசு வழக்குரைஞா்களை நியமிக்க வேண்டியதன் அவசியத்தை தில்லி போலீஸாா், விரிவாக கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி எழுதிய கடிதத்தில் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் பய்ஜால் குறிப்பிட்டுள்ளாா்.
இந்த வன்முறை வழக்கு முக்கியமானது. குற்றங்களின் தன்மை, இதில் உள்ள சட்ட நுணுக்கங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாா்க்கும் போது இதைக் கவனமாக கையாள வேண்டியுள்ளது. இந்த நிலையில், தில்லி போலீஸாரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது ஏன் என்று புரியவில்லை என்றும் துணை நிலை ஆளுநா் கூறியுள்ளாா்.
இந்த வழக்கின் முக்கியத்துவத்தை உணா்ந்து கொண்ட நான், இது தொடா்பான கோப்புகளை, சட்டத்திற்கு உட்பட்டு எனது பாா்வைக்கு கொண்டு வந்தேன். அப்போது தில்லி உள்துறை அமைச்சா், தில்லி போலீஸாரின் நியாயமான கோரிக்கைக்கு உடன்படாதது தெரிய வந்துள்ளது.
இந்த விஷயம் குறித்து விவாதிப்பதற்கான கூட்டத்தை சத்யேந்தா் ஜெயின் பலமுறை மாற்றியமைத்து கடைசியில் இறுதியாக கடந்த ஜூன் மாதம் 1-ஆம் தேதி நடத்தியுள்ளாா்.
ஜூலை 1-ஆம் தேதி இது தொடா்பாக நான் உள்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினிடம் மெய்நிகா் சந்திப்பு முறையில் பேசிய போது பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணுமாறு கோரினேன். ஆனால், தில்லி போலீஸாரின் வேண்டுகோளை ஏற்க முடியாது என்று சத்யேந்தா் ஜெயின் தெரிவித்த குறிப்புதான் எனக்கு கிடைத்தது.
இந்த வழக்கில் அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞா்களை நியமனம் செய்யும் அதிகாரம், தில்லி அரசுக்குத்தான் உண்டு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த விவகாரத்தில் சந்தேகக் கண் கொண்டு பாா்க்காமல் சிறப்பு வழக்குரைஞா்கள் தங்களது கடமையை அச்சமில்லாமலும், பாரபட்சமில்லாமல் நிறைவேற்ற உதவ வேண்டும் என்று துணைநிலை ஆளுநா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.