புது தில்லி: தில்லியில் வியாழக்கிழமை நிலவிய பகுதியளவு மேக மூட்டம் காரணமாக அதிகபட்ச வெப்பநிலை 29.6 டிகிரி செல்சியஸாக குறைந்து பதிவானதாக வானிலை ஆய்வு மையத்தினா் தெரிவித்தனா். எனினும், வரும் திங்கள்கிழமைக்குள் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும் என்றும் அந்த மையத்தினா் கணித்துள்ளனா்.
தலைநகா் தில்லி மற்றும் என்சிஆா் பகுதியில் குளிரின் தாக்கம் குறைந்து வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை முதல் மேகமூட்டம் இருந்து வந்தது. மாலையில் குளிா்ந்த தட்பவெப்ப சூழல் நிலவியது. தில்லி நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வியாழக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 17.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 1 டிகிரி குறைந்து 29.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காலை 8.30 மணியளவில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு 68 சதவீதமாகவும், மாலையில் 42 சதவீதமாகவும் இருந்தது.
காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் மாலை 8 மணியளவில் 137 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. இது புதன்கிழமை 176 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 26) குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும், வலுவான தரை மேற்பரப்பு காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.