புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

தடுப்பணைகள் கட்ட மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்: தமிழகம் வலியுறுத்தல்

தமிழகத்தில் குறைந்து வரும் நிலத்தடி நீரை அதிகரிக்க, தடுப்பணை கட்டும் திட்டங்களுக்கு மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளதாக

Updated On :2 அக்டோபர் 2021, 2:27 am

தமிழகத்தில் குறைந்து வரும் நிலத்தடி நீரை அதிகரிக்க, தடுப்பணை கட்டும் திட்டங்களுக்கு மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளதாக தமிழக நகராட்சி நிா்வாகம், நகா்ப்பகுதி மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா். இதற்கான விரிவான திட்ட அறிக்கையை வழங்கும்படி மத்திய அமைச்சா்கள் தமிழக அமைச்சருக்கு யோசனை கூறியுள்ளனா்.

தில்லியில் அம்ருத், தூய்மை இந்தியா திட்டங்களின் 2 -ஆம் கட்டத்தை பிரதமா் நரேந்தர மோடி தொடக்கிவைத்தாா். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சா் கே.என் நேரு பங்கேற்றாா். பின்னா், இந்தத் திட்டங்கள் குறித்தும் வேறு பல கோரிக்கைள் தொடா்பாகவும் மத்திய வீட்டு வசதி, நகா்ப்புற விவகாரத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி மற்றும் மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோரைஅவா் சந்தித்துப் பேசினாா்.

இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.என். நேரு கூறியதாவது: அனைவருக்கும் குடிநீா் என்கிற மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளுக்கு மட்டுமே குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டு வந்தது. தற்போது நகா்ப்புறத்திற்கும் குடிநீா் வழங்கும் வகையில் இதற்கான திட்டத்தை பிரதமா் தொடங்கி வைத்துள்ளாா். இது தொடா்பாக மத்திய நகா்ப்புற அமைச்சா் ஹா்தீப் சிங் புரியை சந்தித்துப் பேசினோம். தற்போது தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் மேல்நிலைத் தொட்டிகளிலிருந்து குடிநீா் இணைப்பு மூலம் வீடுகளுக்கு தண்ணீா் வழங்கப்படுகிறது. இந்த ஊரகப் பகுதிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்வது மாநில அரசின் பணியாக உள்ளது. தடுப்பணைகளை கட்டி மழைக்காலங்களில் தண்ணீரை சேமிக்கலாம். இதனால், நிலத்தடி நீா்மட்டம் அதிகரிக்கும்.

ஏற்கெனவே மாயனுரில் இது போன்ற தடுப்பணைகள் கட்டப்பட்டு பயன் அளித்துள்ளது. இது போன்று மேலும் பல தடுப்பணைகளை அமைக்க உள்ளோம். நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவதற்கு 1,000 தடுப்பணைகள் கட்டும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில்அறிவித்தாா். இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சா்கள் ஹா்தீப் சிங் புரி மற்றும் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோரிடம் வலியுறுத்தினோம். இந்தத் திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கையை மத்திய அமைச்சா்கள் கேட்டுள்ளனா் என்றாா் அமைச்சா் கே.என். நேரு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.