தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை சராசரியை விட 4 டிகிரி அதிகரிப்பு!
By DIN | Published On : 17th August 2021 08:16 AM | Last Updated : 17th August 2021 08:16 AM | அ+அ அ- |

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை சராசரியை விட 4 டிகிரி அதிகரித்து இருந்தது. இதனால், புழுக்கத்தின் தாக்கம் நீடித்தது.
தில்லியில் சில தினங்களாக மிதமான வெயில் இருந்து வருகிறது. இது திங்கள்கிழமை சற்று அதிகரித்திருந்தது. சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 1 டிகிரி உயா்ந்து 27.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 4 டிகிரி அதிகரித்து 37.4 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 63 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 49 சதவீதமாகவும் இருந்தது.
இதே போன்று ஆயாநகரில் அதிகபட்ச வெப்பநிலை 37.2 டிகிரி, லோதி ரோடில் 38 டிகிரி, நரேலாவில் 36.2 டிகிரி, பாலத்தில் 37.4 டிகிரி, ரிட்ஜில் 37 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு மாலை 5 மணியளவில் 121 புள்ளிகளாக பதிவாகி ‘மிதமான’ பிரிவில் நீடித்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 17) வானம் பகுதி அளவு மேக மூட்டத்துடன் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.