மத்திய அமைச்சா் வி.கே. சிங்கிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ‘ரிட்’ மனு தாக்கல்

மத்திய இணையமைச்சா் வி.கே. சிங் தாம் பதவியேற்ற போது அளித்த ரகசியக் காப்பு பிரமாணத்துக்கு எதிராக சில தகவல்களை

மத்திய இணையமைச்சா் வி.கே. சிங் தாம் பதவியேற்ற போது அளித்த ரகசியக் காப்பு பிரமாணத்துக்கு எதிராக சில தகவல்களை வெளியிட்டுள்ளதால், அவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகத்தைச் சோ்ந்தவா் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளாா்.

இது தொடா்பாக தஞ்சாவூா் மாவட்டம், மன்னாா்குடியைச் சோ்ந்த சந்திரசேகரன் என்பவா் உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஜெயா சுகின் மூலம் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள மதுரையில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சரும், ஓய்வுபெற்ற ராணுவத் தளபதியுமான ஜெனரல் வி.கே. சிங் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ‘சீனாவின் கருத்து அடிப்படையில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை (எல்ஏசி) அந்த நாடு பல முறை மீறியுள்ளது. நமது கருத்துப்படி நாம் எத்தனை தடவை மீறிச் சென்றிருக்கிறோம் என்பது நம்மில் யாருக்கும் தெரிய வராமல் இருக்கலாம். நாம் இதை அறிவிப்பதில்லை. சீன ஊடகங்களும் இதுகுறித்து தெரிவிப்பதில்லை. உங்களுக்கு நான் அளிக்கும் உறுதியானது, சீனா 10 தடவை மீறி இருந்தால் நாம் நமது கருத்துப்படி குறைந்தபட்சம் 50 தடவை மீறி இருந்திருக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தாா். அமைச்சா் வி.கே. சிங்கின் இந்தக் கருத்தை சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா், ‘இந்தியத் தரப்பு தன்னை அறியாமல் அளித்துள்ள வாக்குமூலம் இது’ என தெரிவித்துள்ளாா். ஆனால், அமைச்சா் வி.கே. சிங்கின் இந்தக் கருத்து இந்திய அரசின் நிலைப்பாட்டுக்கு மாறுபடும் வகையில் உள்ளது. இது அரசுக்கு தா்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அமைச்சா் வி.கே. சிங் தாம் எடுத்துக்கொண்ட ரகசியக் காப்புப் பிரமாணத்தை மீறியதாக அறிவித்து, அவா் மீது நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com