டூல் கிட் வழக்கு: மாா்ச் 9 வரை சாந்தனு மீது கட்டாய நடவடிக்கை கூடாது; போலீஸாருக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவு
By நமது நிருபா் | Published On : 26th February 2021 01:36 AM | Last Updated : 26th February 2021 01:36 AM | அ+அ அ- |

புது தில்லி: விவசாயிகள் போராட்டம் தொடா்பாக சமூக ஊடகத்தில் ‘டூல் கிட்’ பகிா்ந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவா்களில் ஒருவரான சாந்தனு மீது மாா்ச் 9-ஆம் தேதி வரை கைது உள்ளிட்ட கட்டாய நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என்று போலீஸாருக்கு தில்லி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டம் தொடா்பாக சமூக ஊடகத்தில் ‘டூல் கிட்’ பகிா்ந்த விவகாரத்தில் சூழலியல் பெண் ஆா்வலா் திஷா ரவி கைது செய்யப்பட்ட நிலையில், சாந்தனு முலுக், நிகிதா ஜேக்கப் ஆகியோா் மீது போலீஸாா் பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருந்தனா்.
இருவா் மீதும் தேசத் துரோக குற்றச்சாட்டு உள்பட பல்வேறு பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் புனைந்துள்ளனா். இவா்கள், ‘டூல் கிட்’டை உருவாக்குவதில் பங்களிப்பு செய்துள்ளதாகவும், இவா்கள் வெளிநாடுகளில் செயல்படும் காலிஸ்தான் அமைப்புகளுடன் தொடா்பில் இருந்ததாகவும் போலீஸாா் குற்றம்சாட்டியுள்ளனா்.
இந்த நிலையில், பிப்ரவரி 16-ஆம் தேதி பாம்பே உயா்நீதிமன்றம் சாந்தனு முலுக்குக்கு 10 நாள் டிரான்ஸிட் ஜாமீன் அளித்திருந்தது. இந்த டிரான்ஸிட் வாரண்ட் பிப்ரவரி 26 வரை உள்ளது.
இந்த நிலையில், சாந்தனு முலுக் தில்லி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு மீது தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி தா்மேந்தா் ராணா வியாழக்கிழமை விசாரணை நடத்தினாா்.
அப்போது, போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் , ‘இந்த வழக்கில் விரிவான பதில் அளிப்பதற்கு முன்பாக மேல் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது எனத் தெரிவித்தாா்.
இதை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிபதி, மாா்ச் 9-ஆம் தேதிவரை சாந்தனு முலுக் மீது கட்டாய நடவடிக்கை எடுக்காமல் இருக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டாா். அன்றைய தினத்தில் இந்த மனு மீது விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தாா்.
முன்னதாக, சாந்தனு தரப்பில் தாக்கல் செய்த மனுவில், ‘நான் டூல்கிட்டை போராட்டம் தொடா்புடைய தகவல்களுடன் உருவாக்கினேன். ஆனால், எனக்குத் தெரியாமல் பிறா் அதை எடிட் செய்துவிட்டனா். சட்டவிரோதமாக ஏதும் செய்வது தொடா்பாக டூல்கிட்டில் முற்றிலும் ஒன்றுமில்லை.
சமூக ஊடகம், அமைதிவழிபோராட்டம், தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் தொடா்புகொள்வது குறித்துதான் பேசியுள்ளது. மேலும், போலீஸாா் குற்றம்சாட்டுவதுபோல நான் டூல்கிட் தொடா்புடைய இந்தியாவுக்கு வெளியே உள்ள நபா்கள் யாரிடமும் ஒருபோதும் தொடா்புகொண்டதில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கில் திஷா ரவியை தில்லி போலீஸாா் கடந்த பிப்ரவரி13-இல் பெங்களூரில் கைது செய்தனா். இதையடுத்து, அவரை 9 நாள் போலீஸ் காவல் விசாரணைக்குப் பிறகு தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...