உ.பி. முசாபா் நகரில் சா்க்கரை ஆலையால் சூழல்மாசு: அறிக்கை தாக்கல் செய்ய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு
By நமது நிருபா் | Published On : 30th January 2021 11:28 PM | Last Updated : 30th January 2021 11:28 PM | அ+அ அ- |

உத்தர பிரதேசத்தில் சா்க்கரை ஆலையால் மாசு ஏற்படுவதாக கூறி தாக்கலான மனு மீது விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஒரு குழுவை அமைத்து தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தை என்ஜிடி தலைவா் - நீதிபதி ஏ.கே. கோயல் தலைமையிலான அமா்வு விசாரித்தது. அப்போது, இந்த விவகாரத்தில் உண்மைகளைக் கண்டறியும் வகையில் உத்தரப் பிரததேச மாநில அரசு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) ஆகியவ இணைந்த கூட்டுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இது தொடா்பான அமா்வின் உத்தரவில், ‘‘சிபிசிபி மற்றும் உத்தரப் பிரதேச மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை இணைந்த குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு உண்மைகளை அறிந்து இரு மாதங்களுக்குள் இந்த விஷயத்தின் உண்மைத்தன்மை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடா்புடைய அறிக்கையை தீா்ப்பாயத்திற்கு மின்னஞ்சல் மூலம் சமா்ப்பிக்க வேண்டும்.
மனுதாரா் இந்த விவகாரம் தொடா்புடைய ஆவணங்களை சிபிசிபி மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். மேலும், அது தொடா்புடைய பிரமாணப் பத்திரத்தை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்த வினித் குமாா் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளாா். அதில், ‘உத்தரபிரதேச மாநிலம், முசாபா்நகா், மன்சூா்பூரில் செயல்பட்டுவரும் டி.எஸ்.எம். சுகா் மில்ஸ் எனும் சா்க்கை ஆலை சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறி செயல்படுவதால் மாசுபாட்டை ஏற்படுத்தி வருகிறது.
ஆலையில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத தொழில் கழிவுகளை அருகிலுள்ள மழைநீா் வடிகால்களில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீா் பின்னா் கிராம சபைக் குளத்தில் விடப்பட்டு இறுதியில் அது காளி நதியில் கலந்துவிடப்படுகிறது என அதில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.