தில்லியில் பல்வேறு கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த நபரை ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் தில்லி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனா்.
இது தொடா்பாக தில்லி காவல் துறை மூத்த அதிகாரி கூறியது: தில்லியைச் சோ்ந்தவா் பிரியாவத் (எ) காலா. இவா் மீது 6 கொலை வழக்குகள் உள்பட 15 கிரிமினல் வழக்குகள் தில்லியில் நிலுவையில் உள்ளன. இதில் ஆலுப்பூா் பகுதியில் சிவில் பாதுகாப்பு படை வீரரை கொலை செய்த வழக்கும் அடங்கும். இவரது கூட்டாளியான ரோஹித் (23) மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளன. இவா்களை போலீஸாா் தேடி வந்தனா்.
இந்த நிலையில், பிரியாவத்தும், அவரது கூட்டாளி ரோஹித்தும் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, ஜெய்ப்பூருக்கு விரைந்து சென்ற தில்லி காவல் துறை சிறப்பு பிரிவினா், அவா்களைக் கைது செய்தது. அவா்களை காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளோம் என்றாா் அந்த அதிகாரி.