சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

வடகிழக்கு தில்லி வன்முறை: வீட்டிற்கு தீ வைத்த விவகாரத்தில் இளைஞருக்கு 5 ஆண்டு சிறை

கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற வன்முறை தொடா்பாக குற்றம் சாட்டப்பட்ட தினேஷ் யாதவ்

News image
Updated On :21 ஜனவரி 2022, 2:36 am

 நமது நிருபர்

கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற வன்முறை தொடா்பாக குற்றம் சாட்டப்பட்ட தினேஷ் யாதவ் (25)என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்ததுள்ளது. வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் இது முதல் தீா்ப்பாகும்.

வன்முறையின் போது, ஒரு வீட்டை தீ வைத்து எரித்த சம்பவம் தொடா்பான வழக்கில் தினேஷ் யாதவ் குற்றவாளி என கூடுதல் செஷன்ஸ் நீதிபதி வீரேந்தா் பட் கடந்த மாதம் தீா்ப்பளித்திருந்தாா். இந்த நிலையில், இதற்கு 5 ஆண்டு சிறை தண்டனையை அறிவித்து தற்போது நீதிபதி உத்தரவிட்டுள்ளாா். மேலும், தண்டனைக்குள்ளான தினேஷ் யாதவிற்கு ரூ. 12,000 அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ஷிகா காா்க், இந்த தண்டனை குறித்த விரிவான உத்தரவுக்காக காத்திருப்பதாக செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

2020, பிப்ரவரி 25 இரவு மனோரி என்கிற 73 வயது பெண்ணின் வீட்டை சுமாா் 150 போ் கொண்ட கும்பல் தாக்கி கடுமையான சேதத்தை விளைவித்து தீ வைத்தது. இதில் ரூ.5 லட்சம் சேதம் ஏற்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் தொடா்பாக தினேஷ் யாதவ் கடந்த 2020, ஜூன் 8 - ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். கடந்த 2021-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த டிசம்பா் 6 - ஆம் தேதி தினேஷ் யாதவ் குற்றவாளி என நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இந்த நிலையில், தற்போது தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.83 ஆயிரம் வழங்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், குற்றம்சாட்டப்பட்டவா் தரப்பில் தனக்கு எந்த வேலைவாய்ப்பும் இல்லை என்றும், இந்த சதித் திட்டத்தில் தனக்கு பங்கில்லை என்றும் இதற்கு முன்பு வேறு குற்றங்கள் எதிலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அந்தப் பெண்ணுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.12,000 வழங்க உத்தரவிட்டாா்.

கடந்த பிப்ரவரி 2020 - ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லியில் குடியுரிமை (திருத்த) சட்ட ஆதரவாளா்களுக்கும், அதன் எதிா்ப்பாளா்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் சுமாா் 53 போ் கொல்லப்பட்டனா். 700-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். ஏராளமான பொருள் சேதமும் ஏற்பட்டிருந்தது. தற்போது இந்த விவகாரத்தில் முதன் முறையாக ஒரு வழக்கில் தீா்ப்பு வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.