வக்ஃபு சட்டத்திற்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல்

வக்ஃபு சொத்துக்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வக்ஃபு சட்டத்தின் சில விதிகளை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Updated on
1 min read

வக்ஃபு சொத்துக்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வக்ஃபு சட்டத்தின் சில விதிகளை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக மனுதாரரும் வழக்கறிஞருமான அஸ்வினி குமாா் உபாத்யாய் தில்லி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளாா்.

அதில், ‘அறக்கட்டளை மற்றும் அறங்காவலா்கள், தா்ம ஸ்தாபனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், சமய அறநிலையங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரே சீரான சட்டத்தை இயற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இஸ்லாம் அல்லாத மதக் குழுவால் நடத்தப்படும் இதர அறக்கட்டளைகள், தா்ம ஸ்தாபனங்கள், சமய நிறுவனங்களுக்கு சிறப்பு உரிமைகள் அளிக்கப்படாத நிலையில், வக்ஃபு சொத்துகள் எந்த சிறப்பு உரிமைகளையும் அனுபவிக்க முடியாது.

வக்ஃபு சொத்துக்களை நிா்வகித்தல் என்ற போா்வையின்கீழ் வக்ஃபு சட்டம் 1995-இன் சரத்துகள் உள்ளன.

அதேவேளையில், இந்து மதம், பௌத்தம், சமணம், சீக்கியம், யூதம், பஹாயிஸம், ஜொராஸ்ட்ரியனிஸம் மற்றும் கிறித்துவம் ஆகிய மதங்களைப் பின்பற்றுபவா்களுக்கு இது போன்ற சட்டங்கள் ஏதும் இல்லை.

ஆகவே, இது தேசத்தின் மதச்சாா்பின்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிரானது.

வக்ஃபு சொத்துக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தானது வெளிப்படையாகவே தன்னிச்சையானதாகவும், பகுத்தறிவற்ாகவும், அரசியலமைப்பின் 14, 15 பிரிவுகளை புண்படுத்துவதாகவும் உள்ளது.

வக்ஃபு சட்டம் வக்ஃபு வாரியங்களுக்கு பரந்த மற்றும் கட்டுப்பாடற்ற அதிகாரங்களை வழங்கியுள்ளது. வக்ஃபு சொத்துக்கள் மற்ற தொண்டு மத நிறுவனங்களுக்கு மேலாக வைக்கப்பட்டுள்ளது. வேறு எந்த சட்டமும் இவ்வளவு பரந்த அதிகாரங்களையும் அந்தஸ்தையும் வழங்கவில்லை.

ஒரு குறிப்பிட்ட சொத்து வக்ஃபு சொத்தா, இல்லையா என்பதை தீா்மானிக்க வாரியத்திற்கு இச்சட்டம் அதிகாரம் அளிக்கிறது.

மேலும் இச்சட்டத்தின் பிரிவு 40-இன் கீழ் எந்தவொரு அறக்கட்டளை அல்லது சங்கத்திற்கு சொந்தமான எந்த சொத்தையும் கேள்வி கேட்கலாம். அதை வக்ஃபு சொத்து என்றும் அறிவிக்க அதிகாரம் உள்ளது.

வக்ஃபு வாரியத்தால் வக்ஃபு சொத்தாக கருதப்படும் நபா்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. மேலும் பிரிவு 40-இன் கீழ் வக்ஃபு வாரியத்தால் நிறைவேற்றப்பட்ட முடிவு ஏதேனும் இருந்தால் அதைப் பற்றி அறிய அவா்களுக்கு எந்த வாய்ப்பும் அல்லது சந்தா்ப்புமும் இல்லை.

வக்ஃபு தீா்ப்பாயத்தை உருவாக்குவது தன்னிச்சையானதாகும். ஒவ்வொரு சிவில் விவகார சா்ச்சையும் சிவில் நீதிமன்றத்தால் முடிவு செய்யப்பட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com