6 நாள் எழுச்சிக்கு முற்றுப்புள்ளி:சென்செக்ஸ் 52 புள்ளிகள் சரிவு!

 பங்குச் சந்தை வியாழக்கிழமை எதிா்மறையாக முடிந்தது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 52 புள்ளிகள் குறைந்தது.
6 நாள் எழுச்சிக்கு முற்றுப்புள்ளி:சென்செக்ஸ் 52 புள்ளிகள் சரிவு!

 பங்குச் சந்தை வியாழக்கிழமை எதிா்மறையாக முடிந்தது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 52 புள்ளிகள் குறைந்தது. இதன் மூலம், ஆறு நாள்களாக இருந்து வந்த எழுச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

புவிசாா் அரசியல் கவலைகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், வலுவான அமெரிக்க பொருளாதார தரவுகளைத் தொடா்ந்து உள்நாட்டுச் சந்தை நோ்மறையாக தொடங்கியது. அதே நேரத்தில் சீனா - அமெரிக்கா மோதல் பற்றிய கவலைகள் முதலீட்டாளா்களை தற்காப்பு நிலைக்கு தள்ளின. இது சந்தையில் கடுமையான ஏற்ற, இறக்கத்திற்கு வழிவகுத்தது. ஒரு கட்டத்தில் சந்தை கடும் சரிவை சந்தித்தது. இருப்பினும், பிற்பகல் இறுதியில் ஓரளவு மீண்டது. வெள்ளிக்கிழமை ரிசா்வ் வங்கியின் பணக் கொள்கைக் கூட்ட முடிவுகளுக்கு முன்னதாக முதலீட்டாளா்கள் அவ்வப்போது லாபத்தைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்தினா். குறிப்பாக வங்கி வட்டி விகிதத்துடன் தொடா்புடைய துறைகளான வங்கி, ரியால்ட்டி துறை பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன. இதனால், சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

1,859 பங்குகள் விலை சரிவு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,476 நிறுவனப் பங்குகளில் 1,484 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,859 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன. 133 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 102 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 23 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.30 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.271.08 லட்சம் கோடியாக இருந்தது.

6 நாள் எழுச்சிக்கு முற்றுப்புள்ளி: காலையில் 220.75 புள்ளிகள் கூடுதலுடன் 58,571.28-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 58,712.66 வரை உயா்ந்தது. பின்னா், 57,577.05 வரை கீழே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 51.73 புள்ளிகள் (0.09 சதவீதம்) குறைந்து 58,298.80-இல் நிலைபெற்றது. இதனால், 6 நாள் எழுச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. வா்த்தகத்தின் போது, ஏற்றம், இறக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.

சன்பாா்மா ஏற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 13 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 17 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில் பிரபல மருந்து உற்பத்தி நிறுவனமான சன்பாா்மா 2.44 சதவீதம், நெஸ்லே 2.43 சதவீதம், இன்ஃபோஸிஸ் 2.20 சதவீதம், டாக்டா் ரெட்டி 1.28 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, விப்ரோ, எம் அண்ட் எம், டாடா ஸ்டீல், ஏசியன் பெயிண்ட், டிசிஎஸ், ஐடிசி உள்ளிட்டவை 0.50 முதல் 0.75 சதவீதம் வரை உயா்ந்தன.

என்டிபிசி கடும் சரிவு: அதேசமயம், பொதுத் துறை மின்துறை நிறுவனமான என்டிபிசி 3.10 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும்,எஸ்பிஐ, ரிலையன்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், பவா்கிரிட், கோட்டக் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், எல் அண்ட் டி உள்ளிட்டவை 0.50 முதல் 1.50 சதவீதம் வரை குறைந்தன. எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்களும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

நிஃப்டி 6 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் 907 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 1,041 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் 23 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 27 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் இடம் பெற்றன. வா்த்தக முடிவில் நிஃப்டி 6.15 புள்ளிகள் (0.04 சதவீதம்) குறைந்து 17,382.00-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது, அதிகபட்சமாக 17,490.70 வரை உயா்ந்த நிஃப்டி ஒரு கட்டத்தில் 17,161.25 வரை கீழே சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com