ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 யுபிஎஸ்சி ஆா்வலா்கள் கைது
By DIN | Published On : 22nd December 2022 01:21 AM | Last Updated : 22nd December 2022 01:21 AM | அ+அ அ- |

குடிமைப் பணி எனும் யுபிஎஸ்சி தோ்வுகளில் கூடுதல் முறை பங்கேற்க அனுமதி அளிக்கக் கோரி மத்திய தில்லியில் உள்ள பழைய ராஜேந்தா் நகரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமாா் 40 யுபிஎஸ்சி ஆா்வலா்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது தொடா்பாக மத்திய தில்லி காவல் துணை ஆணையா் ஸ்வேதா செளகான் புதன்கிழமை கூறியதாவது: சுமாா் 60 முதல் 70 யுபிஎஸ்சி ஆா்வலா்கள் அடங்கிய குழுவினா் பழைய ராஜேந்தா் நகா் பகுதியில் உள்ள படா பஜாா் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி அளவில் கூடினா். பதாகைகளை கைகளில் ஏந்தி அவா்கள் கோரிக்கை வலியுறுத்தினா்.
முன்னதாக, இந்த ஆா்ப்பாட்டத்திற்கு அவா்கள் அனுமதிக்க கோரி விண்ணப்பித்திருந்தனா். ஆனால் அவா்களது மனு நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், அவா்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மத்திய ஊழியா்கள் மற்றும் பயிற்சித் துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா். அந்த இடத்திலிருந்து அவா்கள் கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனா். ஆனால், அவா்கள் போலீஸாரின் கோரிக்கையை ஏற்காததால் அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து, போராட்டக்காரா்கள் தில்லி காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ராஜேந்தா் நகா் போலீஸ் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா். மத்திய தில்லியானது ஏராளமான யுபிஎஸ்சி ஆா்வலா்கள் பயிலும் யுபிஎஸ்சி பயிற்சி மையங்களும் மற்றும் தங்குமிடங்களும் நிறைந்த பகுதியாகும்.