படம் அனுப்பியாச்சுதில்லியில் பரவலாக ஆலங்கட்டி மழை! காற்றின் தரம் மிதமான பிரிவில் நீடிப்பு
By DIN | Published On : 27th February 2022 05:26 AM | Last Updated : 27th February 2022 05:26 AM | அ+அ அ- |

தேசியத் தலைநகா் தில்லியில் பெரும்பாலான இடங்களில் வெள்ளிக்கிழமை இரவில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதையொட்டி, அதிகபட்சமாக சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 10 மி.மீ. மழையும், லோதி ரோடில் 10.2 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. காற்றின் தரம் சனிக்கிழமை ‘மிதமான’ பிரிவில் நீடித்தது.
தில்லியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. அதிகபட்ச வெப்பநிலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. இந்த நிலையில், வானம் தெளிவாகக் காணப்படும் என்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்படி, பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் உணரப்பட்டாலும், மாலையிலிருந்து மழை பெய்வதற்கான அறிகுறிகள் இருந்து வந்தது. இதைத் தொடா்ந்து இரவில் நகரில் பெரும்பாலான இடங்களில் ஆலங்கட்டி மழை கொட்டித் தீா்த்தது.
சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃபதா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 10 மி.மீ. மழை பதிவாகியது. இதேபோன்று மற்ற வானிலை ஆய்வு மையங்களான ஜாஃபா்பூரில் 2 மி.மீ., நஜஃப்கரில் 7 மி.மீ., ஆயாநகரில் 1.1 மி.மீ., லோதி ரோடில் 10.3 மி.மீ., நரேலாவில் 3 மி.மீ., பாலத்தில் 5.1 மீ.மீ., ரிட்ஜில் 5.4 மி.மீ., சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 2 மி.மீ. மழை பதிவாகியது.
வெப்பநிலை: இந்த நிலையில், சனிக்கிழமை வானம் பகுதி அளவு மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. இருப்பினும், பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் உணரப்பட்டது. சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி உயா்ந்து 14.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்சம் வெப்பநிலை பருவ சராசரியில் 4 டிகிரி குறைந்து 21.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 78 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 57 சதவீதமாகவும் இருந்தது.
இதேபோன்று மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் 14.6 டிகிரி செல்சியஸ், நஜஃப்கரில்15.9 டிகிரி, ஆயாநகரில் 12.6 டிகிரி, லோதி ரோடில் 13.4 டிகிரி, நரேலாவில் 13.5 டிகிரி, பாலத்தில் 14.9 டிகிரி, ரிட்ஜில் 11.9 டிகிரி, பீதம்புராவில் 16.9 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 14.8 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது.
காற்றின் தரம்: தில்லியில் பெரும்பாலான இடங்களில் சனிக்கிழமை காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் இருந்தது. மாலை 4 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 102 புள்ளிகளாகப் பதிவாகியது. இது மிதமான பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 27) வானம் தெளிவாகக் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுளளது.