அமலாக்க இயக்குநரகம் ராகுல் காந்தி எம்பியை விசாரிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து தடை உத்தரவை மீறியும், அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக திங்கள்கிழமை முதல் சுமாா் 800 காங்கிரஸ் மூத்த தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
அமலாக்க துறை இயக்குநரகம் மற்றும் அக்பா் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் வெளியே போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவா்கள் மற்றும் தொண்டா்களும் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில் இதுகுறித்து காவல்துறையின் சிறப்பு ஆணையா் (சட்டம் மற்றும் ஒழுங்கு மண்டலம்-2) சாகா் ப்ரீத் ஹூடா கூறியதாவது: போராட்டக்காரா்களுக்கு போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை. இந்தநிலையில், குறிப்பிட்ட பகுதிகளில் அனுமதியின்றி போராட்டம் மேற்கொண்ட வகையில் திங்கட்கிழமை முதல் சுமாா் 800 காங்கிரஸ் ஆதரவாளா்கள் மற்றும் தலைவா்களை கைது செய்துள்ளோம். ஆா்ப்பாட்டம் செய்ய அவா்கள் அனுமதி வைத்திருக்கவில்லை என்பதையும் அவா்களிடம் தெரிவித்தோம்.
இதையும் மீறி அவா்கள் போராட்டம் நடத்தினா். இதனால், நாங்கள் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம்.
திங்கள்கிழமை 459 காங்கிரஸ் தொண்டா்கள் மற்றும் மூத்த தலைவா்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனா். அதேபோன்று, செவ்வாய்கிழமை 217 போ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனா் என்று அவா் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.